சென்னை,
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த ஆண்டை விட, இந்த ஆண்டு 69 சதவீதம் குறைந்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் நீராதாரத்தை பெருக்கி வருவது வடகிழக்கு பருவைமழைதான். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக பருவ மழை சரிவர பெய்யாத காரணத்தால் நாட்டில் தண்ணீர் பஞ்சம் உருவாகி உள்ளது.
இதன் காரணமாக விவசாயம் அடியோடு பாதிக்கப்பட்டு வருகிறது. தண்ணீருக்காக கர்நாடகாவிடம் கையேந்தி நிற்கும் நிலையே நீடித்து வருகிறது.
ஆனால், இந்த ஆண்டாவது வடகிழக்கு பருவமழை நன்றாக பொழியும் என்ற எதிர்பார்த்திருந்த வேளையில், தற்போது மழைக்கு பதிலாக வாடை காற்று வீசி வருகிறது. சில இடங்களில் பனிப்பொழிவும் நிகழ்கிறது.
வாடைக்காற்று வீசினாலே பருவமழை பொய்த்து போவது இயற்கையானது.
ஐப்பசி மாதம் அடைமழை என்றும், கார்த்திகை மாதம் கனமழை என்றும் முன்னோர்கள் சொல்வது உண்டு. ஆனால், தற்போது இயற்கையின் மாற்றத்தால் அனைத்து சூழலுமே மாறி வருகிறது.
வடகிழக்கு பருவமழை குறித்து சென்னை வானிலை மையம் கூறியிருப்பதாவது,
குமரி கடல் பகுதியில் இருந்து கோவா கடற்கரை வரை உருவாகி இருந்த காற்றழுத்த தாழ்வு நிலை தொடர்ந்து அதே பகுதியில் நீடிப்பதால், அடுத்த 24 மணி நேரத்தில் தென் தமிழக கடலோர மாவட்டங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ள உள்ளது.
மேலும் தமிழகத்தின் பிற மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் வறண்ட வானிலை நிலவும் என்றும், சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என அறிவித்துள்ளது.
மேலும், கடந்த ஆண்டை விட, இந்தாண்டு வடகிழக்கு பருவமழை 69 சதவீதம் குறைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.