சென்னை: குறிப்பிட்ட காலத்துக்குள் உரிமையாளரிடம் வீட்டை ஒப்படைக்காத கட்டுமான நிறுவனத்துக்கு கடும் அபராதம் விதித்து, ரியல் எஸ்டேட் ஒழுங்கு முறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில், வீடு, மனை விற்பனையில் முறைகேடுகளை தடுக்க, 2017ல், ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையம் அமைக்கப்பட்டது.இந்த ஆணையத்தில்,  ஆயிரத்துக்கும் மேற்பட்ட கட்டுமான திட்டங்கள், பதிவு செய்யப்பட்டுள்ளன.

8 வீடுகளுக்கு மேற்பட்ட குடியிருப்பு திட்டங்கள் என்றால், இந்த ஆணையத்தில் பதிவு செய்வது கட்டாயமாகும். பதிவு செய்யப்பட்ட திட்டங்களில் வீடு வாங்குவோர், ஏமாற்றப்பட்டால், ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையம் விசாரிக்கும்.

இது தவிர கட்டுமான நிறுவனம், ரியல் எஸ்டேட் சட்ட விதிகளை மீறியது உறுதி செய்யப்பட்டாவ், சட்ட நடவடிக்கை எடுக்க ஆணையத்துக்கு அதிகாரம் இருக்கிறது. அதன்படி, குறித்த காலத்துக்குள் வீட்டை வாங்கியவரிடம் ஒப்படைக்காத நிறுவனம் மீதான புகாரில் பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடு வழங்க ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையம் ஆணையிட்டுள்ளது.

தேன்மொழி, ஸ்ரீராம் ஆகியோர் செய்யூர் தாலுகாவில் வீடுகள் கட்டித் தருவதாக கூறிய ரியல் எஸ்டேட் நிறுவனத்திடம் பணம் செலுத்தி இருந்தனர். அதற்காக அவர்கள் அளித்த தொகை ரூ.12.82. வீட்டுக்கான மொத்த தொகை ரூ.16.69 ஆகும்.

ஆனால், வாக்குறுதி அளித்தபடி அந்த நிறுவனம் வீட்டை உரிமையாளர்களிடம் ஒப்படைக்க வில்லை. 2016ம் ஆண்டு இரு தரப்பினரும் செய்து கொண்ட ஒப்பந்தம் காலாவதியாகி விட்டதால், ஒட்டுமொத்த தொகையும் வட்டியும் செலுத்த வேண்டும்.

ஆனால், அதன்படி கட்டுமான நிறுவனம் நடக்காததால், இருவரும் வழக்கு தொடர்ந்தனர். அதனை விசாரித்த ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையம், பாதிக்கப்பட்டவர்களுக்கு 10.15 வட்டியுடன் கட்டிய ரூ.12.82 லட்சத்தை தர வேண்டும்.

மேலும் வழக்கின் தன்மையை ஆராய்ந்த ஆணையம், பாதிக்கப்பட்டவருக்கு ஏற்பட்ட மன உளைச்சல், அலைச்சல் ஆகியவற்றை கருத்தில் கொண்டு ரூ.1 லட்சம் அளிக்க வேண்டும். அதேபோன்று, பத்திரப்பதிவு உள்ளிட்ட இதர செலவுகளுக்கான தொகையாக ரூ.36,790 தர வேண்டும், அனைத்து தொகையையும் 60 நாட்களுக்குள் அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.