சென்னை: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம் குறித்து தமிழ்நாடு அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்  என இன்று நடைபெற்ற  தேமுதிக போராட்டத்தில் கலந்துகொண்ட அக்கட்சி பொதுச்செயலாளர்  பிரேமலதா வலியுறுத்தினார்.

நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய கள்ளக்குறிச்சி கள்ளச்சாரயா சாவு 60ஆக உயர்ந்துள்ளது. மேலும் பலர் சிகிச்சை பெற்றும் வருகின்றனர். இந்த சாவுக்கு காரணமாக கள்ளச்சாராயம் விற்பனை செய்தவர் திமுக பிரமுகர் கண்ணுக்குட்டி என்று கூறப்படுகிறது. மேலும், இந்த கள்ளச்சாராய விற்பனையை மாவட்ட காவல்துறையினர் கண்டுகொள்ளாமல் இருந்ததற்கு ஆளும் கட்சியைச் சேர்ந்த அரசியல்வாதிகள் காரணம் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதனால், இந்த விவகாரம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில், தேமுக சார்பில், போதை இல்லாத தமிழகத்தை உருவாக்க தவறிய ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசின் நிர்வாக சீர்கேட்டை கண்டித்து தே.மு.தி.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில்  கலந்துகொண்ட தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா கண்டன உரையாற்றினார்.  அப்போது,  கள்ளக்குறிச்சி என்றாலே தற்போது கள்ளச்சாராய சாவால் கண்ணீர் மாவட்டமாக மாறியுள்ளது. கடந்த காலங்களில் தற்போது முதலமைச்சராக உள்ள மு.க.ஸ்டாலின், அவரது சகோதரி கனிமொழி எம்.பி. ஆகியோர் டாஸ்மாக் கடைக்கு எதிராக கருப்பு உடை அணிந்து போராட்டம் நடத்தினார்கள். ஆனால், தற்போது என்ன நடக்கிறது? கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயத்திற்கு பல பேர் பலியாகி உள்ளனர். ஆனால், முதலமைச்சர் நேரில் கூட வந்து ஆறுதல் கூறவில்லை.

இந்த சம்பவத்திற்கு பொறுப்பேற்று மது விலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் முத்துசாமி உடனடியாக பதவி விலக வேண்டும். கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். மேலும், இந்த வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும்.

இது தொடர்பாக தமிழக கவர்னரை விரைவில் சந்தித்து பேச உள்ளேன். தமிழக கவர்னரும், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவிடம் எடுத்துக்கூறி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.