சென்னை: தமிழகத்தில், அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கையின்போது இடஒதுக்கீடு கடை பிடிக்கப்படுவது குறித்து தமிழகஅரசு அறிவித்து உள்ளது.

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையின்போது பின்பற்றப்பட வேண்டிய இட ஒதுக்கீடு குறித்து தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநரகம்  வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது,

 

1) முந்தைய அரசாணைகளின்படி மேல்நிலைப்பள்ளிகள் அங்கீகாரம் வழங்கும் விதிகளில், மேல்நிலைப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கையின் போது, அவ்வப்பொழுது நடைமுறையிலுள்ள இட ஒதுக்கீடு விதிகள் பாடப்பிரிவு வாரியாக கடைபிடிக்கப்பட வேண்டும் என்று குறிப்பிடப் பட்டுள்ளது.

2) பார்வை-3, 4 மற்றும் 5ல் குறிப்பிடப்பட்டுள்ள இட ஒதுக்கீடு தொடர்பான சட்டங்களின்படி, 2020-2021 ஆம் கல்வியாண்டிலும் மேல்நிலைக் கல்விக்கான மாணவர் சேர்க்கை நடைபெறும் பொழுது, மாநிலத்தின் அதிகார வரம்பிற்குள் செயல்படும் அனைத்து வகைப் பள்ளிகளிலும் (சிறுபான்மை கல்வி நிலையங்கள் நீங்கலாக) பழங்குடியினர், ஆதி திராவிடர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு கீழ்க்காணும் விகிதத்தில் கடைபிடிக்கப்பட வேண்டும்.

  1. பொதுப்பிரிவு – 31%
  2. பழங்குடியினர் – 1%
  3. ஆதிதிராவிடர் – 18% (ஆதி திராவிட அருந்ததியர்கள் 18% இடங்களிலிருந்து 3% இடங்களை அன்னாருக்கு முன்னுரிமை அடிப்படையில் ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும்)
  4. மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் 20% சீர்மரபினர்
  5. பிற்படுத்தப்பட்ட இஸ்லாமியர் – 3.5%
  6. பிற்படுத்தப்பட்டோர் 26.5%

3) மேலே குறிப்பிட்டுள்ள 6 பிரிவினருக்கும், மேலே தெரிவித்துள்ளவாறு மாணவர் சேர்க்கையின் போது, பொதுப்பிரிவினருக்கான 31% இடத்திற்கான பட்டியல் முதலில் தயாரிக்கப்பட வேண்டும். இதில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் மட்டுமே முன்னுரிமை வழங்கிடவும், பொதுப்பிரிவினர், ஆதி திராவிடர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்ட பிரினினர் என்ற எவ்வித பாகுபாடின்றி தயாரித்திடவும் அறிவுறுத்தப்படுகிறது. அதன் பின்னர் அந்தந்த பிரிவுக்கான பட்டியல் தயாரிக்கப்பட வேண்டும்.

4) மாநிலத்தின் அதிகாரவரம்பிற்குள் செயல்படும் அனைத்துவகை பள்ளிகளிலும் (சிறுபான்மை கல்வி நிலையங்கள் நீங்கலாக) பாடப் பிரிவு வாரியாக மேற்கூறப்பட்ட விகிதத்தில் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு மேல்நிலைக்கல்விக்கான மாணவர் சேர்க்கை நடைபெற வேண்டும் என அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும். அறிவுறுத்தப்படுகிறது.

அனைத்துப் பள்ளிகளுக்கும் இச்செயல்முறை ஆணையினை அனுப்பி ஒப்பம் பெற்று தங்கள் கோப்பில் வைக்குமாறும் அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும், மேற்கூறியவாறு அனைத்து பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கையை உறுதி செய்யுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.