சென்னை: தமிழகத்தில் தடுப்பூசி பற்றாக்குறை ஏற்பட்டுள்ள நிலையில்,  தமிழக அரசு சார்பில் 39.05 கோடிக்கு தடுப்பூசி கொள்முதல் செய்யப்பட்டு உள்ளது. இந்த தடுப்பூசிகள் நாளை முதல் தமிழகத்திற்கு வர உள்ளதால், தமிழகத்தில் தடுப்பூசி பற்றாக்குறை விரைவில் தீரும்,  முதல்கட்டமாக   தமிழகத்திற்கு ஜூன் மாத இறுதிக்குள் 42.58 லட்சம் தடுப்பூசிகள் வர உள்ளதாக தமிழக சுகாதாரத்துறை  தெரிவித்து உள்ளது.
தமிழகத்தில் கொரோனா 2வதுஅலையின் தீவிர தாக்கம் காரணமாக, உயிரிழப்புகள் அதிகரித்தன. இதனால், மக்களிடையே தடுப்பூசி போட்டுக்கொள்ளும் ஆர்வம் அதிகரித்துள்ளது. இதனால் தடுப்பூசி முகாம்களில் ஏராளமானோர் குவிந்து வருவதால், தடுப்பூசிக்கு கடும் தட்டுப்பாடு எழுந்துள்ளது.
இதற்கிடையில்,  தடுப்பூசிகளை மாநில அரசுகளே நேரடியாக கொள்முதல் செய்யலாம் என மத்தியஅரசுஅனுமதி வழங்கியதால், தமிழகஅரசும், சீரம் மற்றும் பாரத் பயோடெக் நிறுவனங்களின் தடுப்பூசிகள் கொள்முதலுக்கான ஆர்டர்க்ள் செய்துள்ளன. அதன்படி, நாளை முதல் அந்நிறுவனங்களில் இருந்து தமிழகத்திற்கு தடுப்பூசிகள் வரும் என தமிழக சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளனது.

தமிழகத்தைப் பொறுத்தவரை 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மத்திய அரசு ஒதுக்கீட்டின் கீழும், 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மாநில அரசின் கொள்முதல் திட்டத்தின் கீழும் தடுப்பூசிகள் பெறப்பட்டு வருகிறது. அந்த வகையில், மத்திய அரசு ஒதுக்கீட்டின் கீழ் தற்போது வரை 88,53,690 டோஸ் தடுப்பூசிகளும், 18 வயதுக்கு மேற்பட்டோருக்கான தமிழக அரசின் நேரடி தடுப்பூசி கொள்முதல் திட்டத்தின் கீழ் 13,10,270 டோஸ்கள் உள்பட மொத்தம் 1,01,63,960 டோஸ் தடுப்பூசிகள் இதுவரை தமிழகத்திற்கு வந்து சேர்ந்துள்ளன. தற்போது வரை 97,35,420 நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் நாளை முதல் பல்வேறு கட்டங்களாக தமிழகத்திற்கு கூடுதல் தடுப்பூசிகள் வர இருப்பதாக தமிழக சுகாதாரத்துறை தகவல் வெளியிட்டுள்ளது.

அதன்படி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு 14.74 லட்சம் தடுப்பூசிகளும், 45 வயதுக்கு மேற்பட்டோர் பிரிவில் 25.84 லட்சம் தடுப்பூசிகள் என மொத்தமாக தமிழகத்திற்கு 42.58 லட்சம் தடுப்பூசிகள், ஜூலை இறுதிக்குள் பல்வேறு கட்டங்களாக வந்து சேரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசின் சார்பில் 39.05 கோடி செலவில் பாரத் பயோடெக் மற்றும் சீரம் இன்ஸ்டிட்யூட் ஆகிய இரு நிறுவனங்களிடம் கொள்முதல் செய்யப்பட்டிருப்பதாகவும், தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்குள் தடுப்பூசி தட்டுப்பாடு குறையும் என்றும் முதற்கட்டமாக நாளை 63 ஆயிரம் கோவேக்சின் தடுப்பூசிகள் தமிழகத்திற்கு வர இருப்பதாகவும் தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.