சென்னை: ஆவின் பால் பொருட்களின் விற்பனையை அதிகரிக்க பல்வேறு திட்டங்களை தீட்டி வரும் தமிழ்நாடு, தற்போது தள்ளுவண்டியில் ஆவின் ஐஸ்கிரிம்களை விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது. சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் நாசர், கோடை காலம் வருவதால் ஆவின் நிறுவனம் சார்பாக கூல் டிரிங்ஸ் அறிமுகம் செய்யப்பட உள்ளதாகவும், அது  தயாரிப்பதற்கான ஆய்வு பணிகள் நடத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில்,  கோடைகாலத்தில் மக்கள் இருக்கும் இடத்துக்கே சென்று ஐஸ்கிரீம் வகைகளை தள்ளுவண்டியில் விற்பனை செய்ய ஆவின் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.   இதற்காக, சென்னை மற்றும்புறநகர் பகுதிகளைச் சேர்ந்த புதிய தொழில்முனைவோருக்கு வாய்ப்பு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

திமுக ஆட்சிக்கு வந்தபிறகு, ஆவின் பொருட்கள் விற்பனையை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதுவரை,  ஆவின் தயாரிப்பில், பால்மட்டுமன்றி, 225-க்கும் மேற்பட்ட பால்பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன.  இது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.  இந்த நிலையில், வரும் கோடைகாலத்தில் ஐஸ்கிரீம், மோர், லஸ்ஸி ஆகியவற்றின் உற்பத்தியை அதிகரிக்கும் விதமாக மாநிலம் முழுவதும் உள்ள முக்கியஆலைகளில் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதைத்தொடர்ந்து,  பேட்டரி தள்ளுவண்டி மூலமாக ஐஸ்கிரிம், மோர் போன்றவற்றை விற்பனை செய்ய ஆவின் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஆவின் நிர்வாக மேலாண்மை இயக்குநர் ந.சுப்பையன், மக்கள் இருக்கும் இடத்துக்கு நேரடியாக சென்று அவர்கள் விரும்பும்ஆவின் பொருள்களை வழங்க திட்டமிட்டு உள்ளோம். முதல்கட்டமாக, சென்னை மற்றும் புறநகரைச் சேர்ந்த 100 புதிய தொழில்முனைவோருக்கு வாய்ப்பு வழங்க உள்ளோம். இந்த வாகனம் மூலமாக ஆவின் ஐஸ்கிரீம் உள்படபல்வேறு பொருட்களை விற்பனை செய்ய விரும்புவோர் ஆவின் நிர்வாகத்தை அணுகலாம். விற்பனையாளர்கள் தள்ளு வண்டிகள் மூலமாக ஐஸ்கிரீம் வகைகளை விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஆவின் ஐஸ்கிரீம் உள்ளிட்ட பொருட்களை தள்ளுவண்டிகள் மூலமாக விற்பனை செய்ய விரும்புவோர், சென்னை மற்றும் புறநகர் பகுதியைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும். இதற்கான சான்றிதழ் அளிக்கப்பட வேண்டும். விற்பனைக்கு எடுக்கும் பொருட்களின் மதிப்பை முன்பணமாக செலுத்தி பொருட்களை பெற்றுக்கொள்ள வேண்டும். தேர்ந்தெடுக்கப்பட்ட விற்பனையாளர்கள் ரூ.10 ஆயிரம் காப்புத் தொகைசெலுத்த வேண்டும். மாதம் ரூ.30 ஆயிரத்துக்கு குறையாமல் ஐஸ்கிரீம் எடுத்து,விற்பனை செய்ய வேண்டும். விற்பனையாளர்களுக்கு லாபம் 10 சதவீதம்முதல் 15 சதவீதம் வழங்கப்படும்.வங்கி கணக்கு மற்றும் குடும்ப அட்டை ஆகிய ஆவணங்களுடன் 2 அரசு அலுவலர்களால் சான்றளிக்கப்பட்ட நகல்களையும் சமர்ப்பிக்க வேண்டும்.

ஐஸ்கிரீம் விற்பனை செய்ய தேர்ந்தெடுக்கப்படும் பகுதிகள் மற்றும் இடங்கள் விண்ணப்பத்தில் முன்னதாகவே குறிப்பிட்டு அளிக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.