சென்னை:

காமராஜர் ஆட்சியின்போது தமிழக அமைச்சராக இருந்த மறைந்த காங்கிரஸ் உறுப்பினர் கக்கன் வசித்த  வீட்டை தமிழக அரசு காலி செய்யக் கூடாது என, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.

தமிழக அரசு சமீபத்தில் அரசு குடியிருப்பில் தங்கியுள்ள முன்னாள் அரசியல்வாதிகள், அமைச்சர் கள் தங்களது வீடுகளை காலி செய்ய வேண்டும் தமிழக வீட்டு வசதித்துறை சமீபத்தில் உத்தரவிட்டது. அதைத் தொடர்ந்து மூத்த கம்யூனிஸ்டு தலைவர் நல்லக்கண்ணு தனது அரசு வீட்டை காலி செய்தார். இந்த நிலையில், காமராஜர் ஆட்சியில் அமைச்சராக இருந்த கக்கனின் வீடும் காலி அறிவுறுத்தப்பட்ட தாக கூறப்படுகிறது.

இதற்கு அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாள்ர முத்தரசன் கடும் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில், காமராஜர் அமைச்சரவையில் அமைச்சராக இடம் பெற்று பொதுவாழ்வுக்கு முன்னுதாரண மாக விளங்கியவர் கக்கன். அவருக்கு என்று சொந்தமாக வீடு இல்லாத நிலையில், அவரும், அவருக்கு பின்னர் அவரது குடும்பத்தாரும் வசிப்பதற்காக எம்ஜிஆர் முதல்வராக இருந்தபோது, வாடகை இன்றி ஒரு சிறிய வீடு ஒன்று அரசால் வழங்கப்பட்டது.

தற்போதைய அரசு, அவ்வீட்டை காலி செய்திட வேண்டும் என்று கக்கன் குடும்பத்தினருக்கு கடுமையான நெருக்கடி கொடுத்து வருவது வன்மையாக கண்டிக்கத்தக்கது. அரசு மனிதாபிமானம் இன்றி செயல்படுவது மிகுந்த கவலைக்குரியது. எம்ஜிஆர் வழங்கிய வீடு பழுதடைந்து இருக்குமே யானால் அதனைப் புதுப்பித்து தர வேண்டும் அல்லது வேறொரு வீட்டை வழங்க அரசு முன் வரவேண்டும்.

இரண்டும் இன்றி, வீட்டை காலி செய்யுமாறு வற்புறுத்தினால் அவர்கள் எங்கே செல்வார்கள். அரசு கக்கன் குடும்பத்தினருக்கு எதிராக செயல்படுவதை கைவிட்டு, அவரது குடும்பத்தினரை பாதுகாக்க முன்வர வேண்டுமென, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.