சென்னை: நடிகர் விஜய் தனது அரசியல் கட்சியை இந்திய தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ளார். அவரது அரசியல் கட்சியின் பெயர்  தமிழக வெற்றி கழகம் என பெயரிடப்பட்டு உள்ளது. இதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ள நடிகர் விஜய், தற்போது அரசியல்வாதியாகவும் பதவி உயர்வு பெற்றுள்ளார்.

பிரபல தமிழ்  நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் புதிய அரசியல் கட்சியை தொடங்கியுள்ளார். ஏற்கனவே விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டு, களத்தில் உள்ள அரசியல் கட்சிகளுக்கு நிகராக வாக்குகளை பெற்று பல வெற்றிகளை குவித்த  நிலையில், தற்போது 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அரசியல்வாதியாக உருவெடுத்துள்ளார்.

நடிகர் விஜய்  இன்று தனது கட்சி பெயரை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். அவர் தனது கட்சிக்கு தமிழக வெற்றி கழகம் என்று அறிவித்துள்ளார்.

தமிழக வெற்றி கழகம் என்கிற பெயரில் எமது தலையிலான அரசியல் கட்சி துவங்கப்பட்டு, இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய எமது கட்சியின் சார்பில் இன்று விண்ணப்பம் செய்யப்பட்டுள்ளது. முன்னதாக 25.01.2024 அன்று சென்னையில் நடைபெற்ற மாநில பொதுக்குழு மற்றும் செயற்குழுக் கூட்டத்தில், கட்சியின் தலைவர் மற்றும் தலைமை செயலக நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு கட்சியின் அரசிலமைப்பு சட்டம் மற்றும் சட்டவிதிகள் முறைப்படி ஒப்புதல் வழங்கப்பட்டு அனைத்து பொதுக்குழு உறுப்பினர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. வரும் 2026 சட்டமன்றக் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று மக்கள் விரும்பும் அடிப்படை அரசியல் மாற்றத்திற்கு வழிவகுப்பதுதான் நமது இலக்கு என தெரிவித்துள்ளார்.  நடிகர் விஜயன் கட்சி அறிவிப்பை  அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். சமூக வலைதளங்களில் டிரெண்டிங்காக்கி வருகின்றனர்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,  அன்பான தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும். என் பணிவான வணக்கங்கள். “விஜய் மக்கள் இயக்கம்” பல வருடங்களாக தன்னால் இயன்ற வரையில் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களையும், சமூக சேவைகளையும், நிவாரண உதவிகளையும் செய்துவருவது நீங்கள் அனைவரும் அறிந்ததே. இருப்பினும், முழுமையான சமூக, பொருளாதார, அரசியல் சீர்திருத்தங்களை கொண்டுவர ஒரு தன்னார்வ அமைப்பினால் மட்டும் இயலாத காரியம். அதற்கு அரசியல் அதிகாரம் தேவைப்படுகிறது.

தற்போதைய அரசியல் சூழல் பற்றி நீங்கள் அனைவரும் அறிந்ததே நிர்வாக சீர்கேடுகள் மற்றும் ‘ஊழல் மலிந்த அரசியல் கலாச்சாரம்* ஒருபுறம் என்றால், நம் மக்களை சாதி மத பேதங்கள் வாயிலாக பிளவுபடுத்த துடிக்கும் ‘பிளவுவாத அரசியல் கலாச்சாரம்”மறுபுறம், என்று இருபுறமும் நம் ஒற்றுமைக்கும் முன்னேற்றத்திற்குமான முட்டுக்கட்டைகள் நிறைந்துள்ளன. ஒரு தன்னலமற்ற, வெளிப்படையான, சாதிமத பேதமற்ற, தொலைநோக்கு சிந்தனை உடைய, லஞ்ச- ஊழலற்ற திறமையான நிர்வாகதிற்கு வழிவகுக்ககூடிய அடிப்படை அரசியல் மாற்றத்திற்காக குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொருவரும் ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்பது நிதர்சனமான உண்மை.

என்னைப் பொறுத்தவரையில் அரசியல் மற்றொரு தொழில் அல்ல. அது ஒரு புனிதமான மக்கள் பணி. அரசியலின் உயரம் மட்டுமல்ல, அதன் நீள அகலத்தையும் அறிந்துகொள்ள எம்முன்னோர் பலரிடமிருந்து பாடங்களைப் படித்துத் தயார்ப்படுத்தி மனதளவில் பக்குவப்படுத்திக் கொண்டு வருகிறேன்.   ஒப்புக்கொண்ட படங்களை முடித்துக்கொடுத்துவிட்டு முழுமையாக அரசியலில் ஈடுபடுவேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அதோடு, வரும் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் மக்களவைத் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்றும், யாருக்கும் ஆதரவு அளிக்கப்போவதில்லை என்றும் விளக்கம் அளித்துள்ளார்.

மிக முக்கியமாக, அத்தகைய அரசியல், நம் இந்திய அரசியல் அமைப்பு சட்டத்திற்கு உட்பட்டு, தமிழ் நாட்டின் மாநில உரிமைகள் சார்ந்து, இந்த மண்ணுக்கேற்ற பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் (பிறப்பால் அனைவரும் சமம் ) என்கிற சமத்துவ கொள்கைபற்று உடையதாகவும் இருக்க வேண்டும். அத்தகைய அடிப்படை அரசியல் மாற்றத்தை மக்களின் ஏகோபித்த அபிமானமும், அன்பும் பெற்ற முதன்மையான ஒரு மக்கள்சக்தியால் தான் சாத்தியப்படுத்த முடியும் என தெரிவித்துள்ளார்.