டெல்லி: இந்திய அரசின் இணையதளத்தில் தமிழ்நாடு என்ற பெயருக்கு பதிலாக தமிழ்நாயுடு என எழுத்து பிழையுடன் காணப்பட்டது,. இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்ததுடன், உடனே அதை திருத்தவும் வலியுறுத்தப்பட்டது. இதையடுத்து, அந்த  எழுத்துப்பிழை திருத்தப்பட்டது.

நேற்று முன்தினம் (26ம் தேதி)  நாடு முழுவதும் 74வது குடியரசு தினம்  கோலாகலமாக கொண்டாடப்பட்டது. முதன்முறையாக எகிப்து அதிபர் பங்கேற்ற நிலையில்,  முதன்முறை யாக டெல்லி கடமை பாதையில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு தேசிய கொடியேற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.  தொடர்ந்து முப்படைகள், காவல்துறை அணிவகுப்பை தொடர்ந்து,   மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு நடைபெற்றது.

இதில் 17 மாநிலங்களின் அலங்கார ஊர்திகள் இடம்பெற்றது. தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, அசாம், அருணாசல பிரதேசம், மகாராஷ்டிரம், உத்தரபிரதேசம், மேற்குவங்கம், குஜராத், ஹரியானா, ஜார்கண்ட், திரிபுரா, உத்தரகண்ட் ஆகிய மாநிலங்களின் அலங்கரா ஊர்திகளும், ஜம்மு காஷ்மீர், லடாக், தாத்ரா நகர் ஹவேலி மற்றும் டாமன்-டையூ ஆகிய யூனியன் பிரதேசங்களின் ஊர்திகள் பங்கேற்றன.

இதுதொடர்பாக, இந்திய அரசின் இணையதளத்தில் வெளியிடப்பட்ட தகவலில், 17 மாநிலங்களின் பெயர்கள் இடம் பெற்றிருந்தது. அதில் தமிழ்நாடு அரசின் பெயரானது எழுத்துபிழையுடன்  தமிழ்நாயுடு என காணப்பட்டது.  இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதை உடனே திருத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வந்தது.

இந்த நிலையில் தற்போது அந்த  எழுத்துப்பிழை சரிசெய்யப்பட்டு ‘தமிழ்நாடு’ என  திருத்தப்பட்டுள்ளது. அதேபோல் கேரள மாநிலத்தின் பெயரும் ஆங்கிலத்தில் கேரிலா என்று தவறாக எழுதப்பட்டிருந்தது. தற்போது கேரள மாநிலத்தின் பெயரும் திருத்தப்பட்டுள்ளது.