சென்னை: தமிழ்நாட்டில் நடப்பாண்டு வரிவருவாய் கடந்த ஆண்டை விட உயர்ந்துள்ளது என  தமிழக வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார். அதன்படி  வணிகவரித்துறையில் 61 சதவீதம் வரி வருவாயும், பதிவுத்துறையில் 71 சதவீதம் வரி வருவாயும் கிடைத்துள்ளது.

சென்னை கிண்டியில் உள்ள நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலையத்தில், வணிகவரித்துறை சார்பிலான சென்னை வடக்கு நிர்வாக கோட்டம் மற்றும் நுண்ணறிவு கோட்டத்தை சேர்ந்த அனைத்து அலுவலர்களுனான சீராய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக அமைச்சர் மூர்த்தி பங்கேற்றார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது, கடந்த ஆண்டில் மண்டல வாரியாக ஆய்வு கூட்டம் நடைபெற்றது. தற்போது கோட்ட வாரியாக ஆய்வு கூட்டம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் கிருஷ்ணகிரி, தர்மபுரியில் கூட்டம் நடைபெற்றதை அடுத்து தற்பொழுது சென்னை வடக்கு கோட்டத்தில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது என அமைச்சர் மூர்த்தி தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் வரிவருவாய் கடந்த ஆண்டை விட நடப்பாண்டு உயர்ந்துள்ளது என்றவர்,  வணிகவரித்துறையில் கடந்த ஆண்டை விட 61 சதவீதம் வரி வருவாயும், பதிவு துறையில் 71 சதவீதம் வரி வருவாயும் உயர்த்தி உள்ளோம் என தெரிவித்தார். மேலும்இ, வரி ஏய்ப்பு செய்யும் நிறுவனங்களின் ஜி.எஸ்.டி. லைசன்ஸ் ரத்து செய்யப்பட்டு, அபராதம் விதிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார். கடந்த 10 ஆண்டுகளில் இது போன்ற கூட்டங்கள் நடைபெற்றதாக தெரியவில்லை என கூறிய அவர், இனி வரும் காலங்களில் இந்த துறையில் அதிக வருவாய் ஈட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதி கூறினார்.