விழுப்புரம்: தமிழ்நாடு திராவிடத்தால் உருவானதுதான்  என்று விழுப்புரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில்  பல்வேறு நலத்திட்டங்கள் தொடக்கம் மற்றும் அடிக்கல் நாட்டு விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் பேசும்போது குறிப்பிட்டார்.

மேலும் 11 புதிய அறிவிப்புகளையும் வெளியிட்டார்.

இரு நாள் பயணமாக விழுப்புரத்தில் களஆய்வு பணிகளை மேற்கொண்டு வரும் முதலமைச்சர் ஸ்டாலின், இன்று காலை, விழுப்புரம் அருகே வழுதரெட்டியில் நடந்த 21 சமூகநீதிப் போராளிகளுக்கான மணிமண்டபம், ஏ.கோவிந்தசாமியின் நினைவரங்க திறப்பு விழாவில் கலந்துகொண்டார். பின்னர் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில்  முதல்வர் ஸ்டாலின்  ரூ.133 கோடி மதிப்பிலான 116 திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து,

ரூ.425 கோடியிலான 231 முடிவுற்ற திட்டப்பணிகளையும் முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.

மேலும்,  ரூ.324 கோடியில் 35,003 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின்,  எல்லோருக்கும் எல்லாம் என்பதே திராவிட மாடல் ஆட்சி. திராவிடம்தான் தமிழ்நாடு என்ற பெயரையும், தமிழுக்கு செம்மொழி அந்தஸ்தையும் பெற்று கொடுத்தது. இன்றைய நவீன தமிழ்நாடு திராவிடத்தால் உருவானதுதான், என்றுகூறியுள்ளார்.

என் வாழ்நாள் முழுக்க எண்ணி பெருமைப்படும் வகையில் ஏ.கோவிந்தசாமியின் நினைவு மண்டபம் திறந்து வைக்கும் நிகழ்வு அமைந்துள்ளது. 2019 விக்கிரவாண்டி இடைத்தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதி நிறைவேற்றப்பட்டுள்ளது. மாற்றார்கூட குறை சொல்ல முடியாதவர் ஏ.கோவிந்தசாமி என்று பெரியார் தெரிவித்தார்.

21 சமூகநீதி போராளிகள் 1987-ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் சுட்டுக்கொல்லப்பட்டார்கள். அதன்பின் ஆட்சிக்கு வந்த திமுக மிகவும் பிற்படுத்தப்பட்டோர் வகுப்பை உருவாக்கி 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. மேலும் உயிர் தியாகம் செய்த குடும்பத்தாருக்கு மாதந்தோறும் ரூ.3 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது.

ராமசாமி படையாச்சிக்கு சென்னையில் சிலை அமைக்கப்பட்டது.

வன்னியர் பொது சொத்து வாரியம் அமைத்தது திமுக ஆட்சியில்தான். தற்போது சமூகநீதி போராளிகளுக்கு மணிமண்டபம் அமைக்கப்பட்டுள்ளது.

திராவிட இயக்கம் தோன்றியதே சமூகநீதியை நிலைநாட்டுவதற்காகத்தான். நேற்று நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்தில் மாவட்டத்துக்கான தேவைகளை கண்டறியப்பட்டது. அதன்படி நந்தன்கால்வாய் ரூ.304 கோடி மதிப்பில் நிதி ஒதுக்கீடு, ரூ.84 கோடியில் தளவானூர் தடுப்பணை, காணையில் ரூ.35 கோடி மதிப்பில் கூட்டுக்குடிநீர் திட்டம், திருவாமாத்தூரில் ரூ.4 கோடி மதிப்பில் திருமண மண்டபம், விழுப்புரம் பழைய நகராட்சி அலுவலகம் ரூ.2 கோடி மதிப்பில் டவுன் ஹால் அமைக்கப்படும் என்பன உள்ளிட்ட திட்டங்களை அறிவிக்கிறேன்.

என்னை பொறுத்தவரை நம்பர் ஒன் முதல்வர் என்பதைவிட நம்பர் ஒன் தமிழ்நாடு என்பதே இலக்கு. எல்லோருக்கும் எல்லாம் என்பதே திராவிட மாடல் ஆட்சி. திராவிடம்தான் தமிழ்நாடு என்ற பெயரையும், தமிழுக்கு செம்மொழி அந்தஸ்தை பெற்று கொடுத்தது. இன்றைய நவீன தமிழ்நாடு திராவிடத்தால் உருவானதுதான்.

இவ்வாறு பேசினார்.

பின்னர், இந்நிகழ்ச்சியில் விழுப்புரம் மாவட்டத்துக்கான 11 புதிய அறிவிப்புகளை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்.

அதில் ரூ. 304 கோடி செலவில் நந்தன் கால்வாய் திட்டம்,

ரூ. 1.5 கோடியில் விக்கிரவாண்டியில் கக்கன் நகரில் சமுதாய கூடம்,

கோலியனூரைச் சுற்றுள்ளப் பகுதி மக்கள் பயன்பெறும் வகையில் கூட்டுகுடிநீர் திட்டம்.

திருவாமாத்தூர் அபிராமேஸ்வரர் கோயிலில் இந்துசமய அறநிலையத்துறை சார்பில் ரூ. 4 கோடி மதிப்பில் திருமண மண்டபம், உணவு அருந்தும் இடம், சமையல் கூடம் ஆகியவை அமைக்கப்படும்.

செஞ்சி, மரக்காணத்தில் புதிய தொழிற்பயிற்சி மையங்கள்.

ரூ. 84 கோடியில் தளவானூர் அணைக்கட்டு சீரமைப்பு

உள்ளிட்ட விழுப்புரம் மாவட்டத்துக்கான புதிய அறிவிப்பை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்

!