சென்னை: பேருந்தில் பெண் பயணிகளிடம் எரிச்சலூட்டும் வகையில் கோபமாகவோ, ஏளனமாகவோ, இழிவாகவோ பேசக்கூடாது என போக்குவரத்துக்கழக ஊழியர்களுக்கு போக்குவரத்துத்துறை அறிவுரை கூறியுள்ளது.

தமிழக அரசு பேருந்துகளில் மகளிர்க்கு இலவச பயணம் என அரசு அறிவித்த நிலையில் தமிழகம் முழுவதும் பேருந்து நடத்துனர்கள், ஓட்டுனர்கள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகளை போக்குவரத்து துறை வெளியிட்டுள்ளது. அதன்படி,

பேருந்திற்காக ஒரு பயணி காத்திருந்தாலும் பேருந்து நிறுத்ததில் நிறுத்தி அவரை அழைத்து செல்ல வேண்டும்.

வயது முதிர்ந்த பெண்களுக்கு இருக்கை வசதி கிடைக்க உதவி செய்ய வேண்டும்.

பேருந்தில் பெண் பயணிகளிடம் எரிச்சலூட்டும் விதத்திலோ, கோபமாகவோ, ஏளனமாகவோ பேசக்கூடாது.

பெண் பயணிகள் ஏறும்போதும், இறங்கும் போதும் காத்திருந்து நடத்துனரின் சமிக்ஞைக்கு பிறகே பேருந்து புறப்பட வேண்டும்.

பேருந்தில் பெண் பயணிகளிடம் அன்புடனும், மரியாதையுடனும் நடந்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு அதில்  கூறப்பட்டுள்ளது.