சென்னை:

மிழகத்தில் தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில், சட்டவிரோதமாக போடப்பபட்டு நிலத்தடி நீர் எடுக்கப்பட்டு வந்த 10 போர்வெல்களை அரசு அதிகாரிகள், அழித்தனர். சென்னை உயர்நீதி மன்றத்தின் உத்தரவை தொடர்ந்து இந்த அதிரடி நடவடிக்கை பாய்ந்துள்ளது.

தமிழகத்தில் சென்னை உள்பட பல மாவட்டங்களில் கடுமையான தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ள நிலையில், நிலத்தடி நீர் மட்டமும் குறைந்து உள்ளது. இதையடுத்து, சென்னைக்கு வெளியே சுற்றுப்புறப்பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களில் அனுமதியின்றி போர்வெல் போடப்பட்டு, அதன்மூலம் தனியார் லாரிகளுக்கு அதிக விலைக்கு தண்ணீர் விற்பனை செய்யப்பட்டு வருவதாக புகார்கள் எழுந்தன.

இதுதொடர்பாக சென்னை உயர்நீதி மன்றமும், தமிழகஅரசுக்கு கடுமையான உத்தரவுகளை வழங்கி உள்ளது. இந்த நிலையில், சென்னை அடுத்த பூந்தமல்லி அருகே உள்ள  பிடாரித்தங்கல் என்ற கிராமத்தில் உள்ள விவசாய நிலையங்களில் இருந்து, அனுமதியின்றி லாரிகளுக்கு தண்ணீர்  வழங்கப்பட்டு வருவதாக புகார்கள் வந்தன.

இதையடுத்து சம்பவ இடத்துக்கு சென்ற அரசு அதிகாரிகள் அங்கு, அனுமதியின்றி சட்ட விரோத மாக  தண்ணீர் பிடித்துக்கொண்டிருந்த 20 லாரிகளை மடக்கினர். மேலும், அந்த பகுதியில் சட்ட விரோதமாக  அமைக்கப்பட்டு தண்ணீர் எடுக்கப்பட்டு வந்த  10 சட்டவிரோத போர்வெல்களையும், உடைத்து நொறுக்கி அழித்தனர்.  அத்துடன் தண்ணீரை ஏற்ற பயன்படுத்தப்பட்ட பவர் மோட்டார்கள், கேபிள்கள் மற்றும் குழாய் இணைப்புகளையும் அவர்கள் பறிமுதல் செய்தனர்.