சென்னை: தக்காளியின் விலை வரலாறு காணாத அளவில் ஏறி வரும் நிலையில், பொதுமக்களுக்கு குறைந்த விலையில் கிடைக்கும் வகையில், சென்னை உள்பட மாநிலம் முழுவதும் 300 ரேஷன் கடைகளில் நாளை முதல் தக்காளி விற்பனை செய்யப்படும் என்று கூட்டுறவுத்துறை அறிவித்துள்ளது.

தமிழர்களின் உணவில் தக்காளி இன்றியமையாதது. ஆனால், கடந்த சில வாரங்களாக தங்காளியின் விலை விண்ணைத்தொடும் அளவுக்கு வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது. இதற்கு காரணம், வெளிமாநிலங்களில் தக்காளி வரத்து குறைவு என கூறப்படுகிறது. மேலும், தமிழ்நாட்டில் போதுமான அளவுக்கு விளைச்சல் இல்லை என்றும் கூறப்படுகிறது.  கோயம்பேடு சந்தைக்கு நாள் ஒன்றுக்கு 1100 டன் தக்காளி தேவைப்படும் நிலையில், தற்போது வரத்து குறைந்துள்ளதால் அதன் விலைஅதிகரித்துள்ளது.

தக்காளி விலை உயர்வு காரணமாக, இல்லத்தரசிகள் கடும் வேதனை அடைந்துள்ளனர். இதுமட்டுமின்றி, மற்ற காய்கறிகள் மற்றும் மளிகை பொருட்களின் விலையும் உயர்ந்து வருகிறது.  இதனால், தக்காளி விலை உயர்வை கட்டுப்படுத்த, தமிழ்நாடு அரசே கொள்முதல் செய்து, குறைந்த விலையில் ரேஷன் கடைகள், பண்ணை பசுமை கடைகளில் விற்பனை செய்ய வேண்டும் என பொதும்க்கள் கோரிக்கை வைத்தனர்.

இதையடுத்து, முதற்கட்டமாக சென்னையில் உள்ள ரேசன் கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில், தக்காளி விலை இன்று மீண்டும் உயர்ந்துள்ளது. கிலோ தக்காளி விலை  140 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.   அதுபோல, சின்ன வெங்காயம் விலை கிலோவுக்கு 20 ரூபாய் அதிகரித்து, 220 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.

இந்த நிலையில், தக்காளி விலையை கட்டுப்படுத்தும் நோக்கில்  தமிழ்நாடு முழுவதும் 300 நியாய விலை கடைகளில் நாளை முதல் தக்காளி விற்பனை செய்ய கூட்டுறவுத்துறை முடிவு செய்துள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின் பேரில்,  ஏற்கனவே சென்னையில் உள்ள நியாய விலை கடைகள் மூலம் தக்காளி விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில்,  இனிமேல் தமிழ்நாடு முழுவதும் விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி   தமிழ்நாடு முழுவதும் நாளை (12ந்தேதி()  முதல் மேலும் 300 நியாயவிலைக் கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்படும் என்று கூட்டுறவு துறை அறிவித்துள்ளது.

தற்போது ரேஷன் கடைகளில் தக்காளி கிலோ ரூபாய் 60க்கு விற்பனை செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.