சென்னை: ரூ.100 கோடி மதிப்பிலான இடத்தில்  உள்ள  வன்னியர் சங்க கட்டிடத்தை தமிழ்நாடு அரசு சீல் வைத்திருந்த நிலையில், அதுதொடர் பான தமிழக அரசின் உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டு உள்ளது.

சென்னை கிண்டியை அடுத்த பட் சாலையில் வன்னியர் சங்கத்தின் மாநில தலைமை அலுவலகம் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வருகிறது. இந்த  இடம்  அறநிலையத்துறைக்கு சொந்தமான  இடம் என்றும், அதை வன்னியர் சங்கம் ஆக்கிரமித்து  இருப்பதாக தமிழ்நாடுஅரசு குற்றம் சாட்டியதுடன், இந்த இடத்துக்கு சீல் வைத்தது.

இந்த இடத்தில் உள்ள வன்னியர் சங்க கட்டிடத்தில்,  பல்வேறு சமூகங்களைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள்  தங்கியிருந்து பல்வேறு கல்வி நிறுவனங்களில் பட்டப்படிப்பு, பொறியியல் படிப்பு, பட்டயப்படிப்பு ஆகிய படிப்புகளை பயின்று வருகின்றனர்.  இங்கு  திடீரென கடந்த ஆண்டு  ஆகஸ்டு மாதம்  எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல், காவல் துறை காவலுடன் வன்னியர் சங்க தலைமை அலுவலகத்துக்குள் நுழைந்த வருவாய்த் துறையினர், அங்கு தங்கி படித்து வந்த மாணவர்களை சட்டவிரோதமாக அப்புறப்படுத்தி, அந்த இடத்துக்கு சீல் வைத்தனர். இது பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து தமிழகஅரசு வெளியிட்ட அறிவிப்பில்,  கோயில் பயன்பாட்டுக்காக தற்காலிகமாக வழங்கப்பட்டிருந்த அரசு நிலத்தில், வன்னியர் சங்கக் கட்டிடம் என்ற பெயரில் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த ரூ.100 கோடி மதிப்பிலான நிலத்தை மீட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. அதில், செங்கல்பட்டு மாவட்டம், பல்லாவரம் வட்டம், செயின்ட் தாமஸ் மவுண்ட் கிராமத்தில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த 41,952 சதுர அடி நிலம் வெள்ளிக்கிழமை மாவட்ட நிர்வாகத்தால் மீட்கப்பட்டது. இந்த நிலமானது வருவாய் பதிவேட்டில் காலம் கடந்த குத்தகை நிலம் எனத் தாக்கலாகியுள்ளது. இதனை கோயில் பயன்பாட்டுக்கு தற்காலிகமாகப் பயன்படுத்திக்கொள்ள காசிவிஸ்வநாதர் தேவஸ்தானத்துக்கு தமிழக அரசால் அனுமதி வழங்கப்பட்டிருந்தது. பின்னர் இவ்விடம் கோயில் பயன்பாட்டுக்கு பயன்படாமல் பிற நபர்களால் ‘வன்னியர் சங்கக் கட்டிடம்’ என்ற பெயரில் கட்டிடம் கட்டி ஆக்கிரமிக்கப்பட்டதோடு அதன் மூலம் அரசுக்கு குத்தகை தொகை எதுவும் செலுத்தப்படாமலும் இருந்து வருகிறது.

எனவே, மேற்படி அரசு நிலத்தில் பல ஆண்டுகளாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு உள்ளவற்றை அகற்றிட தமிழ்நாடு நில ஆக்கிரமிப்பு சட்டம் 1905 பிரிவு 7 மற்றும் 6-ஆகியவற்றின் கீழான அறிவிக்கை பல்லாவரம் வட்டாட்சியர் அலுவலகம் மூலம் 28-11-2022 மற்றும் 6-3-2023 ஆகிய தேதிகளில் வழங்கப்பட்டன. ஆக்கிரம்பு செய்தவர்கள் மேற்படி ஆக்கிரமிப்புகளை அகற்றிக்கொள்ளாத நிலையில், வருவாய் நிலையாணை எண்.29-ன் பிரிவு 13-ன் படி, மேற்படி ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட சுமார் ரூபாய் 100 கோடி மதிப்புள்ள, சுமார் ஒரு ஏக்கர் நிலத்தினை பல்லாவரம் வட்டாட்சியர் மூலம் 18-8-2023 அன்று அரசின் வசம் கொண்டு வரும் பொருட்டு பூட்டி சீலிட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இவ்விடம் தற்பொழுது சென்னை மெட்ரோ ரயில் பணிகளுக்கு பயன்படுத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல் நாத் கூறியுள்ளார் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசின் உத்தரவை எதிர்த்து வன்னியர் சங்கம் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு, தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வில்  விசாரிக்கப்பட்டு வந்தது. கடந்த ஆகஸ்டு மாத விசாரணையின்போது, வன்னியர் சங்க கட்டிடத்தை இடிக்கப்போவதாக வெளியிடப்பட்ட அறிவிப்புக்கு தடை விதித்த நீதிபதிகள்,  செப்டம்பர் மாதம் நடைபெற்ற விசாரணையின்போது,  அப்போது வன்னியர் சங்கம் தரப்பில், “சீல் வைக்கப்பட்ட கட்டிடத்தில் மாணவர்களின் சான்றிதழ், லேப்டாப் ஆகியவை சிக்கியுள்ளன. எனவே, அவற்றை எடுத்து, மாணவர்களிடம் திருப்பிக் கொடுக்க அனுமதிக்க வேண்டும்” என கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், நிலத்துக்கு உரிமை கோரும் அரசு மற்றும் மனுதாரர் இடையேயான பிரச்சினையில் மாணவர்கள் பாதிக்கப்படக்கூடாது எனக் கூறி மானாவர்களின் உடைமைகளை எடுக்க அனுமதியளித்து உத்தரவிட்டனர். தொடர்ந்து வழக்கு  அக்டோபர் 9-ம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதிகள்,  அன்றைய தினமும் பரபரப்பு வாதங்கள் நடைபெற்றன.

இந்த நிலையில், வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. பல்வேறு கட்ட விசாரணைகளைத் தொடர்ந்து, இன்று சென்னை உயர்நீதி மன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கி உள்ளது. தீர்ப்பில், பரங்கிமலையில், செயல்பட்டு வந்த 41,952 சதுர அடி நிலத்தை மீட்பது தொடர்பான அரசின் உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது என கூறி,  தமிழ்நாடு அரசின் உத்தரவை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வன்னியர் சங்க அலுவலகக் கட்டிடமும், அது அமைந்துள்ள நிலமும் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக 1980-களின் தொடக்கத்திலிருந்தே பாமக நிறுவனர் ராமதாஸால் நிறுவப்பட்ட வன்னியர் சங்கத்தின் கட்டுப்பாட்டில் தான் உள்ளது. 1991-ம் ஆண்டில் அந்த இடம் தங்களுக்கு சொந்தமானது என்று கோரி இந்து சமய அறநிலையத் துறை சார்பில் பூந்தமல்லி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கில் வன்னியர் சங்கத்தின் வாதங்களைக் கேட்காமல், அந்த இடம் அறநிலையத் துறைக்கு சொந்தமானது என்று 2010-ம் ஆண்டில் பூந்தமல்லி கீழமை நீதிமன்றம் எக்ஸ் பார்ட்டி தீர்ப்பு வழங்கியது.

அதனடிப்படையில் அந்த இடத்தை கைப்பற்ற நடவடிக்கை எடுக்க அனுமதி கோரி அறநிலையத் துறை தாக்கல் செய்த மனுவை எதிர்த்து வன்னியர் சங்கம் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், வன்னியர் சங்கத்தின் வாதத்தை கேட்காமல் தீர்ப்பளித்தது தவறு என்று ஆணையிட்டது. அதை எதிர்த்து இந்து சமய அறநிலையத் துறை உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. அதை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம், இந்த விவகாரத்தில் சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு செல்லும் என்றும், அறநிலையத் துறை வழக்கை கீழ்நீதிமன்றம் மீண்டும் விசாரிக்க வேண்டும் என்றும் கடந்த 09.12.2014 அன்று தீர்ப்பளித்தது. அதனடிப்படையில் இது குறித்த அறநிலையத் துறை வழக்கு சென்னை ஆலந்தூர் நீதிமன்றத்தில் கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாக விசாரிக்கப்பட்டு வருகிறது.

ஆலந்தூர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை 10 ஆண்டுகளாக நடைபெற்று வரும் போதிலும், அந்த வழக்கை நடத்த இந்து சமய அறநிலையத் துறை எந்த வகையிலும் ஆர்வம் காட்டவில்லை. ஒவ்வொரு முறையும் அறநிலையத் துறை வழக்கறிஞர் வழக்கை ஒத்திவைக்கக் கோருவதையே வாடிக்கையாகக் கொண்டிருந்தார். அந்த வழக்கு வரும் 28-ஆம் தேதி விசாரணைக்கு வரவிருந்த நிலையில் தான், இந்த நிலத்துக்கும், வழக்குக்கும் எந்த வகையிலும் தொடர்பில்லாத வருவாய்த் துறை, வன்னியர் சங்க தலைமை அலுவலகத்தில் புகுந்து மாணவர்களை கட்டாயமாக அப்புறப்படுத்தியுள்ளது.

வன்னியர் சங்க அலுவலகத்தில் தங்கியுள்ள மாணவர்கள் அனைவரும் கிராமப்புறங்களைச் சேர்ந்த ஏழை மாணவர்கள் ஆவர். அவர்களுக்கு வெளியில் தங்கி படிக்க வசதி இல்லாததால் தான், அவர்களுக்கு வன்னியர் சங்கம் இடமும் கொடுத்து, பிற உதவிகளையும் செய்து வருகிறது. அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தியது மாணவர்களின் கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் எதிர்காலத்தை மிகவும் பாதிக்கும். நிலத்தின் உரிமை தொடர்பாக வன்னியர் சங்கத்துக்கும், இந்து சமய அறநிலையத்துறைக்கும் இடையே வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், வருவாய்த் துறையின் இந்த செயல் தவறானது” என்று அவர் கூறியுள்ளார்.