சென்னை:

த்திய மாநில அரசுகளை கண்டித்து வரும் 13ந்தேதி தமிழக காங்கிரஸ் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.

தமிழ்நாட்டில் நீட் தேர்வை ரத்து செய்யக்கோரியும், எய்ம்ஸ், ஜிப்மர் போன்ற மருத்துவ கல்லூரிகளுக்கு மத்திய அரசு விலக்கு அளித்திருக்கும்போது, தமிழகத்திற்கும் விலக்கு அளிக்க வேண்டும் என்றும், மத்திய மாநில அரசுகளை கண்டித்து  வரும் 10-ந்தேதி காங்கிரஸ் சார்வில் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

நாடு முழுவதும் உள்ள மருத்துவ மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளுக்கு தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வுக்கான (Neet) விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான அவகாசம் நேற்றுடன் முடிவடைந்தது.  10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பங்களை இணையதளத்தின் மூலம் அனுப்பியுள்ளனர். இதற்கான தேர்வு வருகிற மே 7-ம் தேதி நடைபெற உள்ளது.

இந்நிலையில் நுழைவுத் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கும் மசோதா தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் பரிந்துரையோடு குடியரசு தலைவரின் ஒப்புதலுக்கு ஜனவரி 31-ம் தேதி அனுப்பப்பட்டுள்ளது.

ஜல்லிக்கட்டுக்காக நிறைவேற்றப்பட்ட அவசர சட்டத்திற்கு குடியரசு தலைவரின் ஒப்புதலை பெறுவதற்கு எடுத்துக்கொண்ட சரியான முயற்சிகளைப்போல் தமிழக அரசு எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்பது மிகுந்த வேதனைக்கும், கண்டனத்திற்கும் உரியது.

தமிழக அரசின் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 85 விழுக்காடு இளநிலை மருத்துவ இடங்களுக்கும் மற்றும் 50 விழுக்காடு முதுநிலை மருத்துவ இடங்களுக்கும், தனியார் மருத்துவக்கல்லூரிகள் தமிழக அரசின் ஒதுக்கீட்டிற்கு வழங்கக்கூடிய 65 விழுக்காடு இளநிலை மருத்துவ இடங்களுக்கும், சிறுபான்மை மருத்துவக் கல்லூரிகளுக்கு வழங்கக்கூடிய 50 விழுக்காடு இடங்களுக்கும் நீட் நுழைவுத் தேர்வு மூலம் மட்டுமே மாணவர் சேர்க்கையை நடத்திட முடியும்.

ஆனால், மத்திய அரசின் கல்வி நிறுவனங்களான எய்ம்ஸ், ஜிப்மர் போன்றவற்றிற்கு நீட் நுழைவுத் தேர்விலிருந்து விலக்கு வழங்கியிருப்பது அப்பட்டமான பாரபட்ச நடவடிக்கையாகும்.

நடப்பு ஆண்டில் நீட் தேர்வு குறித்து கருத்து கூறிய தமிழக கல்வி அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், ‘மாணவர்கள் எல்லோரும் தேர்வு எழுத தயார் நிலையில் தான் இருக்கிறார்கள்” என்று கூறியிருப்பது அனைவரையும் கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

மொத்தத்தில் அரசு பள்ளிகளில் படித்தவர்களில் ஒரு சதவீதத்தினர் தான் மருத்துவக் கல்லூரிகளில் சேர முடிந்தது என்ற நிலை தமிழக மாணவர்களின் கல்வியின் தரத்தை அம்பலப்படுத்தியுள்ளது.

இந்நிலை குறித்து கொஞ்சம் கூட கவலையோ, வருத்தமும் இல்லாமல் கல்வியமைச்சர் கருத்து கூறியிருப்பதைவிட பொறுப்பற்ற செயல் வேறு எதுவும் இருக்க முடியாது.

மத்திய பா.ஜ.க. அரசு, 8 லட்சம் மாணவர்களின் எதிர்காலத்தை பாழடிக்கும் வகையில் நுழைவுத் தேர்வை திணிப்பதை எதிர்த்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பாக வருகிற மார்ச் 10 ஆம் தேதி, வெள்ளிக்கிழமை காலை 10 மணி அளவில் கண்டன ஆர்ப்பாட்டம் சென்னையில் நடத்தப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

சென்னை மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகள் இணைந்து முன்னின்று நடத்தும் கண்டன ஆர்பாட்டம் நடைபெறும் இடம் பின்னர் அறிவிக்கப்படும்.

நுழைவுத் தேர்வை தடுத்து நிறுத்தாத மத்திய, மாநில அரசுகளை கண்டித்து நடைபெறும் ஆர்பாட்டத்தில் காங்கிரஸ் நிர்வாகிகள், மற்றும் காங்கிரஸ் கட்சியினரும் பொதுமக்களும், மாணவர்களும், இளைஞர்களும் பங்கேற்று நீட் தேர்வுக்கு எதிராக கண்டன குரல் எழுப்ப அனைவரும் அணி திரண்டு வருக என அன்போடு அழைக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்