சென்னை: தமிழில் தேர்ச்சி பெறாமல் தமிழ்நாடு அரசு பணிகளில் சேர முடியாது என்பது தொடர்பான சட்ட திருத்த மசோதாவை  பேரவையில் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் இன்று தியாகராஜன் தாக்கல் செய்தார் .

தமிழ்நாட்டு, அரசு பணிகளில் சேர தமிழ்கட்டாயம் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு, டிஎன்பிஎஸ்சி உள்பட பல தேர்வுகளுக்கு தமிழில் தேர்ச்சி கட்டாய மாக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில்,  தமிழில் தேர்ச்சி பெறாமல் அரசு பணிகளில் சேர முடியாது என்பது தொடர்பாக புதிய சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

நடப்பாண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த 9ந்தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கிய நிலையில், இன்றுடன் முடிவடைகிறது. கடைசிநாளான இன்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணய ஆணையத்தால் நடத்தப்படும் அனைத்து போட்டித் தேர்வுகளிலும் தமிழ் மொழி கட்டாயம் என்பதை வலியுறுத்தும் நிலையில், 2016ம் ஆண்டு தமிழ்நாடு அரசு பணியாளர் சட்டத்தை திருத்துவதற்கான சட்ட மசோதாவை   அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார்.

அதில்,. தமிழில் போதிய அறிவு இல்லாத விண்ணப்பதாரர்கள் தகுதி பெற்றிருந்து பணியில் அமர்ந்திருந்தாலும் பணியில் சேர்ந்த தேதியிலிருந்து 2 ஆண்டுகளுக்குள் தமிழில் தேர்ச்சி பெற வேண்டும் என்ற சட்ட திருத்தம் அதில் கொண்டு வரப்பட்டுள்ளது.

மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு துறைகளிலும் மாநில பொதுத்துறை நிறுவனங்களிலும் தமிழ் தெரிந்த இளைஞர்களை 100 சதவீதம் ஆள்சேர்ப்பு செய்வதை உறுதி செய்வதற்காக, ஆள் சேர்ப்பு முகாம்கள் நடத்தும் ஆட்சேர்ப்புக்கான அனைத்து போட்டி தேர்வுகளிலும் தமிழ் மொழி கட்டாயம் என கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பர் 1-ந்தேதி அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதன்படி தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணய ஆணையத்தால் நடத்தப்படும் அனைத்து போட்டித் தேர்வுகளிலும் தமிழ் மொழி கட்டாயம் என அரசாணை சொல்கிறது. டிசம்பர் 2021 அன்று கொண்டுவரப்பட்ட அரசாணைக்கு செயல்வடிவம் கொடுக்கும் விதமாக சட்ட மசோதாவை இன்று அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சட்டசபையில் தாக்கல் செய்தார்.