சென்னை: அரசு போக்குவரத்துக்கழக டிரைவர், கண்டக்டர்  பணிக்கு தமிழில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது கட்டாயம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழ்நாட்டில் திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு அரசு பணிகளில் சேர தமிழ் தேர்ச்சி கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அரசு பணிக்கான தேர்வுகளின்போது தமிழில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில்,  தமிழக அரசின் போக்குவரத்து கழகத்தில் 812 டிரைவர்- கண்டக்டர் நியமனம் செய்யப்படுவார்கள் என அரசாணை வெளியிடப்பட்டது.

விரைவுப் போக்குவரத்துக் கழகம், மாநகரப் போக்குவரத்து கழகம், விழுப்புரம் கோட்டம் நீங்கலாக, மற்ற கோட்டங்களில் காலியாக உள்ள 812 ஓட்டுநர் உடன் நடத்துனர் (Driver cum conductor) பணியிடங்களை நிரப்புவதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, கும்பகோனம் கோட்டத்தில் காலியாக உள்ள 174, சேலம் கோட்டத்தில் 254, கோவை கோட்டத்தில் 60, மதுரை கோட்டத்தில் 136, திருநெல்வேலி கோட்டத்தில் காலியாக உள்ள 188 பணியிடங்களை நிரப்புவதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

ஓட்டுநர் உடன் நடத்துனர் (Driver cum conductor) பணியிடங்களுக்கான தகுதிகள்

10ஆம் வகுப்பு தேர்ச்சியடைந்திருக்க வேண்டும். தமிழில் எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

கனரக வாகனங்களை ஓட்டுவதற்கான தகுதியான லைசென்ஸ் வைத்திருக்க வேண்டும். கனரக வாகனம் ஓட்டுவதில் 18 மாதங்கள் அனுபவம் கண்டிப்பாக வேண்டும். அதுதவிர நடத்துனர் லைசென்ஸ் இருக்க வேண்டும்.

ஓட்டுநர் உடன் நடத்துனர் (Driver cum conductor) பணியிடங்களுக்கான ஊதியமாக ரூ.17,700 முதல் ரூ.56,200 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணிகளை மேற்கொள்ளும் டி. சி. சி. பணியாளர்களை தேர்வு செய்வதற்கான நடைமுறைகளை உருவாக்கியுள்ளது. அதன்படி, பொதுத் தமிழ் தேர்வில் 40 சதவீத மதிப்பெண் பெற்றால் மட்டுமே தேர்ச்சி என கருதப்பட்டு, இதர தேர்வ தாள் மதிப்பீடு செய்யப்படும்.

அதேநேரம், மொத்த மதிப்பெண்ணில் தமிழ் தேர்வு மதிப்பெண் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படமாட்டாது எனவும், 150 மதிப்பெண்ணுக்கு தேர்வர் எடுக்கும் மதிப்பெண் மட்டுமே கணக்கில் கொள்ளப்படும் என்றும் தெரிவித்துள்ளது.