டெல்லி: வீடுகள் வாடகைக்கு கொடுத்தால் ஜிஎஸ்டி என தகவல்கள் பரவிய நிலையில், குடியிருப்பு பகுதியை வர்த்தக நிறுவனங்களுக்கு வாடகைக்கு விட்டால் மட்டுமே ஜிஎஸ்டி என மத்தியஅரசு விளக்கம் அளித்துள்ளது.

 கடந்த மாதம், பாக்கெட்டில் அடைக்கப்பட்ட, லேபிள் ஒட்டப்பட்ட அரிசி, தயிர், கோதுமை மாவு, பருப்புவகைகள், தயிர், லஸ்சி உள்ளிட்ட உணவு பொருட்கள் மீது 5 சதவீத ஜி.எஸ்.டி. அமலுக்கு வந்தது.  அத்துடன்,  குடியிருப்பு பயன்பாட்டுக்கு வீட்டை வாடகைக்கு விட்டால் ஜி.எஸ்.டி. என்ற தகவலும் பரவியது.

இதுதொடர்பாக  காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது ‘டுவிட்டர்’ பதிவில், ”அன்றாட உணவு பொருட்களுக்கு ஜி.எஸ்.டி. விதித்த பிறகு இப்போது வீட்டு வாடகைக்கும் ஜி.எஸ்.டி. விதிக்கப்பட்டுள்ளது” என்று கூறியிருந்தார். அதைத்தொடர்ந்து, திரிணாமுல் எம்.பி., சாகேத் கோகலே, ”இனிமேல் வீட்டு வாடகை 18 சதவீதம் உயரும். ஏனென்றால், மோடி அரசு வீட்டு வாடகை மீது 18 சதவீத ஜி.எஸ்.டி. விதித்துள்ளது. விலைவாசி உயர்வுக்கிடையே சாதாரண மனிதர்களிடம் இருந்து ஒவ்வொரு ரூபாயையும் பறிக்க மோடி அரசு திட்டமிட்டுள்ளது” என்று விமர்சித்து இருந்தார்.

இந்த நிலையில், வாடகை வீடுகளுக்கு ஜிஎஸ்டி என்ற குற்றச்சாட்டை மறுத்துள்ள மத்திய நிதி அமைச்சகம்,  குடியிருப்பு பயன்பாட்டுக்கு வீட்டை வாடகைக்கு விட்டால் கிடையாது. வணிக பயன்பாட்டுக்கு வாடகைக்கு விட்டால்தான் 18 சதவீத ஜி.எஸ்.டி. விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், ஒரு நிறுவனத்தின் உரிமையாளரோ, பங்குதாரரோ ஒரு குடியிருப்பை தனிப்பட்ட பயன்பாட்டுக்கு வாடகைக்கு எடுத்தால்கூட ஜி.எஸ்.டி. கிடையாது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.