மதுரை: தமிழ் மொழியை வளர்க்க தமிழ்நாடு அரசு தேவையான அனைத்து நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரையை சேர்ந்த ஸ்டாலின் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார். அவரது மனுவில், மதுரையில் உலக தமிழ் சங்கம் திறக்கப்பட்டு 4 ஆண்டு களுக்கு மேலாகியும் தமிழ் மொழி வளர்ச்சிக்கு தேவையான கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தவில்லை. நூலகத்தில் தரமான நூல்கள் இல்லை. உலக தமிழ் சங்கத்தில் உள்ள நூலகத்தில் தமிழ் வளர்ச்சிக்கு தேவையான அனைத்து தமிழ் நூல்கள், தமிழ் ஆராய்ச்சி நூல்கள், தமிழ் மொழி வளர்ச்சியுடன் தொடர்புடைய பிற மொழி நூல்களை வைக்கவும், நூலகத்தில் புதிய அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தரவும் உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார்.

இந்த மனு மீது நீதிபதிகள் நாராயணா, சத்ய நாராயண பிரசாத் அமர்வு  விசாரித்து வருகிறது.  ஏற்கனவே நடைபெற்ற விசாரணையின்போது,  மதுரை உலக தமிழ் சங்கம் சார்பில், துணை இயக்குநர் ஆஜராகி, வழக்கு குறித்து விளக்கம் அளித்தார். இந்த நிலையில், வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, தமிழ் மொழியை வளர்க்க தமிழ்நாடு அரசு கூடுதல் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். போதுமான அளவு நிதியை ஒதுக்கி சங்ககால தமிழ் இலக்கியம் குறித்தும், நவீன கால தமிழ் இலக்கியம் குறித்தும் பிரபலப்படுத்த வேண்டும் என தெரிவித்தனர். தமிழ் இலக்கியங்களை பிரபலப்படுத்தும் வகையில் பல்வேறு நிகழ்வுகளை முன்னெடுக்க அரசுக்கு உத்தரவிட்டு நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்தனர்.