மதுரை:

வாக்கு பதிவு இயந்திரம் வைக்கப்பட்ட அறைக்குள் அதிகாரி நுழைந்த விவகாரம் தொடர்பான வழக்கில், மதுரை மாவட்ட ஆட்சியரை மாற்ற  தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த 18ந்தேதி வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில், மதுரையில்  ஓட்டுப் பெட்டிகள் வைக்கப் பட்டிருந்த அறைக்குள்  தேர்தல் அதிகாரியான தாசில்தார் புகுந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம் தகுந்த நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி  சுயேச்சை வேட்பாளர் பசும்பொன் பாண்டியன் மற்றும், மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளர் வெங்கடேசன்  வழக்கு தொடர்ந்திருந்தனர்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மதுரை வாக்கு எண்ணிக்கை மையத்தில் சில பாதுகாப்பு குறைபாடுகள் கண்டறியப்பட்டுள்ளன. உதவி தேர்தல் அதிகாரி அறிவுறுத்தலின் பேரில் தாசில்தார் வாக்கு எண்ணும் மையத்திற்குள் சென்றதாக தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், வாக்கு எண்ணும் மையத்திற்குள் அனுமதியின்றி பெண் அதிகாரி நுழைந்த விவகாரத்தில் மதுரை மாவட்ட தேர்தல் அதிகாரி நடராஜன் மற்றும் துணை தேர்தல் அதிகாரி, ஆட்சியரின் உதவியாளர், காவல் உதவி ஆணையர் ஆகியோரையும் மாற்ற வேண்டும் என்றும்,  உதவி காவல் ஆணையர் மற்றும் அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும், சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், வழக்கு தொடர்பாக தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை  30-ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.