டெல்லி: அகில இந்திய காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய அகில இந்திய மகிளா காங்கிரஸ் தலைவர்  சுஷ்மிதா தேவ் இன்று மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் திரிணமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். இது காங்கிரஸ் கட்சியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

முன்னாள் மக்களவை எம்.பியும், மூத்த காங்கிரஸ் தலைவருமான  சுஷ்மிதா தேவ், அகில இந்திய மகிளா காங்கிரஸ் கட்சியின் தலைவராக பணியாற்றி வந்தார். இவர் திடீரென கட்சியின்  அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும் விலகுவதாக, கட்சியின் தலைமைக்கு நேற்று கடிதம் அனுப்பினார். கட்சித்தலைவர் சோனியா காந்திக்கு அனுப்பி உள்ள அந்த கடிதத்தல், கட்சியில் இருந்து இவர் விலக்குவதற்கான காரணங்கள் என்பது குறித்து தெரிவிக்கப்படவில்லை.

இந்த நிலையில், இன்று காலை கொல்கத்தா சென்ற சுஷ்மிதா தேவ், அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் திரிணமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களுல் ஒருவரான டெரிக் ஓ பிரையன் மற்றும் அபிஷேக் பானர்ஜி முன்னிலையில்,   திரிணமூல் காங்கிரஸில் இணைந்துள்ளார்.

சுஷ்மிதா தேவின் திடீர் விலகல் காங்கிரஸ் கட்சியினரிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.