டில்லி

ய்வு ஒன்றின் மூலம் தற்போதுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களில் 40% பேர் மீது குற்ற  வழக்குகள் உள்ளதாகத் தெரிய வந்துள்ளன.

தேசிய தேர்தல் கண்காணிப்பகம், ஜனநாயக சீர்திருத்தச் சங்கம் ஆகிய அமைப்புகள் இணைந்து ஒரு ஆய்வை மேற்கொண்டன. கடைசியாக மக்களவை, மாநிலங்களவை  உறுப்பினர்கள், தேர்தலுக்காக தாக்கல் செய்த பிரமாண பத்திரங்களில், தங்கள் மீதான வழக்குகள், சொத்து மதிப்பு ஆகியவற்றைக் கூறியிருந்தனர்.

இவற்றை ஆய்வு செய்த மேற்கண்ட அமைப்புகள் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளன.

அந்த அறிக்கையில்,

”மக்களவை, மாநிலங்களவை இரண்டிலும் மொத்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை 776. அவர்களில் 763 நாடாளுமன்ற உறுப்பினர்களின் விவரங்களை ஆய்வு செய்து இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.  தற்போதுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களில் 40 சதவீதம் பேர் (306 நாடாளுமன்ற உறுப்பினர்கள்) மீது மீது குற்ற வழக்குகள் உள்ளன.

இதில்  25 சதவீதம் பேர் (194 நாடாளுமன்ற உறுப்பினர்கள்மீது) மீது, கொலை, கொலை முயற்சி, ஆள் கடத்தல், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் போன்ற கடுமையான குற்ற வழக்குகள் உள்ளன. குறிப்பாக, 11 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொலை வழக்கைச் சந்தித்து வருகிறார்கள்.  மாநிலங்கள் வாரியாக அதிகபட்சமாக, பீகார் மாநிலத்தைச் சேர்ந்த 41 நாடாளுமன்ற உறுப்பினர்கள் குற்ற வழக்குகளை சந்தித்து வருகிறார்கள்.

இவர்கள் சொத்து மதிப்பை எடுத்துக்கொண்டால், 763 நாடாளுமன்ற உறுப்பினர்களின் மொத்த சொத்து மதிப்பு ரூ.29 ஆயிரத்து 251 கோடி ஆகும். இரு அவைகளைச் சேர்ந்த பா.ஜனதா நாடாளுமன்ற உறுப்பினர்கள் 385 பேரின் மொத்த சொத்து மதிப்பு ரூ.7 ஆயிரத்து 51 கோடி ஆகும்.

அதிக பட்சமாகப் பாரத ராஷ்டிர சமிதியின் 16 நாடாளுமன்ற உறுப்பினர்களின் மொத்த சொத்து மதிப்பு ரூ.6 ஆயிரத்து 156 கோடி ஆகும். அடுத்த இடங்களில் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ், காங்கிரஸ், ஆம் ஆத்மி ஆகிய கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர்.  தற்போது ஒரு நாடாளுமன்ற உறுப்பினரின் சராசரி சொத்து மதிப்பு ரூ.38 கோடியே 33 லட்சம் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.”

என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.