டெல்லி: நாடாளுமன்ற தேர்தலில் தேனி தொகுதியில் ஓ.பி.ரவீந்திரநாத் வெற்றி பெற்றது செல்லாது என்று செனனை உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

2019-ம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில், தேனி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட ஓ.பி.ரவீந்திரநாத் வெற்றி பெற்றார். அவரது வேட்புமனுவில், சொத்து விவரங்கள் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை மறைத்துள்ளார். எனவே, தேனி தொகுதியில் அவர் வெற்றி பெற்றதை செல்லாது என அறிவிக்க வேண்டும் எனக் கோரி தேனி தொகுதி வாக்காளரான மிலானி என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தாக்கல் செய்திருந்தார். அவரது மனுவில்,  “தனக்கு வாக்களிக்க, வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து ரவீந்திரநாத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார். பணப்பட்டுவாடா புகாரின் பேரில், வேலூர் தொகுதி தேர்தல் தள்ளிவைக்கப்பட்ட நிலையில், தேனி தொகுதியிலும் அதிக பணப்பட்டுவாடா நடந்தும், தேர்தல் தள்ளிவைக்கப்படவில்லை” என்று கூறியிருந்தார். ஆனால் இந்தத் தேர்தல் வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல. எனவே வழக்கை விசாரணைக்கு ஏற்கக்கூடாது என ரவீந்திரநாத் நிராகரிப்பு மனுவை தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர், கடந்த ஜூலை 6ம் தேதி, 2019-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில், தேனி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஓ.பி.ரவீந்திரநாத்தின் வெற்றி செல்லாது என்று தீர்ப்பளித்தார். மேலும், இந்த தீர்ப்பை 30 நாட்களுக்கு நிறுத்தி வைத்தும் நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.

இதையடுத்து ஓபி ரவீந்திரநாத் தரப்பில் சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு தடை விதிக்க கோரி   உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல்  செய்யப்பட்டது. இந்த மனுவை, உச்ச நீதிமன்ற நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வு விசாரணை நடத்தியது.  ஓ.பி.ரவீந்திரநாத் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் கே.கே.வேணுகோபால், கபில் சிபல் மற்றும் ஜெயந்த் பூஷன் ஆகியோர் ஆஜரானார்கள். அப்போது, ,‘‘தேர்தலின் போது ரவீந்திரநாத் அனைத்து சொத்துக்களுக்கும் முறையாக கணக்கு காட்டி உள்ளார்’’ என தெரிவித்தனர்.

வழக்கின் விசாரணையைத் தொடர்ந்து,  சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்கப்படுகிறது  என்றும், அடுத்த கட்ட விசாரணை  அக்டோபர் 4ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது என அறிவிக்கப்பட்டது. மேலும்,  இந்த விவகாரத்தில் . வழக்கில் இரு தரப்பினரும் இரண்டு வாரத்தில் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். மேலும் ஓ.பி.ரவீந்தரநாத் தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினராக செயல்படலாம்’’ என உத்தரவு பிறப்பித்தனர்.