டில்லி: 

நாடு முழுவதும் லோக் ஆயுக்தா நீதிமன்றங்கள் அமைப்பது தொடர்பாக பிரமாண பத்திரம் தாக்கல் செய்யும்படி உச்சநீதி மன்றம் தமிழகம் உள்பட 12 மாநில அரசுகளுக்கும் உத்தரவிட்டுள்ளது.

பிரதமர், மத்திய அமைச்சர், மாநில முதல்வர்கள், அமைச்சர்கள் மற்றும்  அரசு அதிகாரிகளின் ஊழல்களை விசாரிக்க வகை செய்யும்  வகையில்  கொண்டு வரப்பட்டது லோக்பால் மசோதா. ஆனால், இந்த மசோதா இன்னும் சரியாக அனைத்து மாநிலங்களிலும் அமல்படுத்தவில்லை. அதுபோல லோக்ஆயுக்தா அமைப்பும் அமைக்கப்படவில்லை.

இது தொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதி மன்றம், எத்தனை மாநிலங்களில் லோக் ஆயுக்தா வழக்குகளை விசாரிப்பதற்காக நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டுள்ளது என்று கேள்வி எழுப்பினர்.

மேலும், இந்தியா முழுவதும் லோக்ஆயுக்தா நீதி மன்றங்கள்  அமைப்பது தொடர்பாக  தமிழகம் உள்பட 12  மாநில தலைமை செயலர்களும் சாக்குபோக்கு எதுவும் கூறாமல், தற்போதைய நிலைய குறித்து 2 வாரத்திற்குள் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என  உத்தரவிட்டுள்ளது.

இன்று தலைநகர் டில்லியில் லோக்பால், லோக் ஆயுக்தாவை உடனே அமல்படுத்தக்கோரி அன்னா ஹசாரே மீண்டும் உண்ணாவிரத போராட்டம் தொடங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.