சென்னை:  9 மாதங்களுக்கு பிறகு பத்திரமாக பூமி திரும்பிய விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸுக்கு தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்தார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இன்று  கேள்வி நேரம் முடிந்ததும், முதல்வர் ஸ்டாலின் இந்திய வம்சாவளியான சுனிதா வில்லியம்ஸ் பத்திரமாக பூமி திரும்பி இருப்பதை வரவேற்று பேசினார்.

இதுதொடர்பாக சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது,   “விண்வெளியில், சர்வதேச விண்வெளி மையத்தில் (ஐஎஸ்எஸ்) 287 நாட்களாக தங்கியிருந்த இந்திய வம்சாவெளியைச் சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ், அமெரிக்க விண்வெளி வீரர் வில்மோர் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக பூமிக்குத் திரும்ப முடியாத நிலை ஏற்பட்டது. அவர்களின் உடல் நிலை பாதிக்கப்படும் என்றும், உயிருக்கு ஆபத்து என்றும் பல்வேறு தகவல்கள் வெளியாகின. இருந்தும், அந்த விண்வெளி மையத்தில் அவர்கள் அயராது தங்கள் பணிகளை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் ஃபால்கன் 9 ராக்கெட்டுடன் டிராகன் விண்களம் அனுப்பப்பட்டு சர்வதேச விண்வெளி மையத்தைச் சென்றடைந்தது.

இதனையடுத்து சுனிதா, வில்மோர் உள்ளிட்டோருடன் மேலும் 2 வீரர்களும் ஃப்ளோரிடா அருகே கடலில் பத்திரமாக இறங்கினர். அவர்கள் பத்திரமாக பூமிக்கு வந்தடைந்த செய்தி நம் அனைவரையும் மகிழ்ச்சியடையச் செய்துள்ளது. இத்தருணத்தில் சுனிதா வில்லியம்ஸுக்கும் அவரை பத்திரமாக பூமிக்கு கொண்டு வர உதவிய அனைவருக்கும் பாராட்டுகளையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று கூறினார்.