பெங்களூர்:
கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக நாளை கர்நாடக மாநிலத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக மாநில முதல்வர் எடியூரப்பா அறிவித்து உள்ளார். ஆனால் ஏற்கனவே திட்டமிட்ட திருமணங்கள் போன்ற அத்தியாவசிய தேவைகளுக்கு தளர்வு அறிவிக்கப்பட்டு உள்ளது.

கர்நாடக மாநிலத்தில் இதுவரை கொரோனா தொற்று பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1743 ஆக உள்ளது.  தற்போது சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை 1105 ஆகவும்,  குணமடைந்து வீடு திரும்பியோர் எண்ணிக்கை 597 ஆக உள்ளது. இதுவரை  41 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் 4வது முறையாக மே 31ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. ஆனால், பல தளர்வுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.
கர்நாடக மாநிலத்திலும்  கடந்த வாரம் முதல் கொரோனா ஊரடங்கில் இருந்து போக்குவரத்து உள்பட பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளது.  இதனால் மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றனர்.
இந்த நிலையில், அங்கு மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக அங்கு நாளை முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
ஏற்கனவே இதுபோன்று 3 முறை முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது 4வது முறையாக மாநில அரசு முழு ஊரடங்கு பிறப்பித்து உள்ளது.