ராஞ்சி:

சட்டீஸ்கரில் மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் ஆதிக்கம் நிறைந்த சுக்மா மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் மற்றும் தீவிரவாதிகள் இடையே சண்டை வெடித்தது. இதில் 24 சிஆர்பிஎப் வீரர்கள் உயிரிழந்தனர். 7 பேர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்த வீரர்கள் ஹெலிகாப்டர்கள் உதவியுடன் சண்டை நடந்த பகுதியில் இருந்து பாதுகாப்பாக மீட்கப்பட்டு ராய்பூர் மற்றும் ஜாக்தால்பூர் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். இது வரை 2 பேர் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது என உள்துறை அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இன்று மதியம் 1 மணியளவில் காலா பாதார் பகுதியில் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்கு 74 பாட்டாலியன் படை பிரிவு வீரர்கள் பாதுகாப்பு வழங்கிவந்தனர். அப்போதுதான் என்கவுன்டர் ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையே சட்டீஸ்கார் மாநில முதல்வர் ராமன் சிங் அவசர கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் ஆதிக்கம் நிறைந்த பகுதிகளில் சாலை மேம்பாட்டு வசதிகள் தொடர்பான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஆனால் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பயங்கரவாதிகள் தான் இத்தகைய தாக்குதல்களை முன்னெடுத்து வருகிறார்கள்.