சென்னை

விமான நிலையம் அருகே திடீரென ஒரு கார் சாலையில் தீப்பிடித்து எரிந்ததால் கடும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 

சென்னையில் விமான நிலையத்தில் இருந்து கிண்டி கத்திப்பாரா மேம்பாலம் நோக்கி ஜிஎஸ்டி சாலையில் ஒரு கார் சென்று கொண்டு இருந்தது.  அந்தக் கார் மீனம்பாக்கம் மெட்ரோ ரயில் நிலையம் அருகே சென்று கொண்டு இருந்தபோது கார் முன்புறத்தில் இருந்து கரும்புகை வெளியானது.

இந்த காரை செலுத்திக் கொண்டிருந்த காரின் உரிமையாளர் சூரஜ் பயந்து போய் காரை சாலையோரம் நிறுத்தி விட்டு குடும்பத்துடன் வெளியேறினார்.  காரின் முன்புறத்தில் பற்றிய தீ வேகமாக கார் முழுவதும் பரவி கார் எரிந்து சேதமானது.   உரிமையாளர் சூரஜ் காரை நிறுத்தி வெளியேறியதால் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.

தகவல் அறிந்து விரைந்து வந்த மீனம்பாக்கம் காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் காரின் தீயில் நீரைப் பீய்ச்சி அடித்து நெருப்பை அணைத்தனர்.    மீனம்பாக்கம் காவல்துறையினர் தீ விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  இதனால் நகரில் கடும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.  இந்த விபத்தை கண்டோர் வீடியோ எடுக்க முயன்றதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு பிறகு சரி செய்யப்பட்டுள்ளது.