லண்டன்:

பிரிட்டன் தலைநகர் லண்டனில் உள்ள ஒரு பள்ளியில், மாணவர்களுக்கு வீட்டு பாடமாக தற்கொலை கடிதம் எழுத சொன்ன ஆசிரியர்கள் மீது பெற்றோர்கள் கடும் அதிருப்தியை வெளியிட்டு உள்ளனர்.

லண்டன் நகரில் கிட்பிரோக்கி என்ற இடத்தில் தாமஸ் டாலிஸ் என்ற பள்ளி இயங்கி வருகிறது. இங்கு படிக்கும் டீன்ஏஜ் வயதுடைய மாணவர்கள், 60 பேருக்கு அவர்களின் ஆங்கில ஆசிரியர், வீட்டு பாடமாக தற்கொலை கடிதத்தை எழுதி வரும்படி பணித்துள்ளார்.

பிரபல எழுத்தாளர் ஷேக்ஸ்பியர் எழுதிய, ‘மெக்பத்’ கதையில் வரும் உருக்கமான தற்கொலை கடிதம் போல் இருக்க வேண்டும் என்று அந்த ஆசிரியர் தெரிவித்துள்ளார். இது பெற்றோருக்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து ஒரு மாணவரின் பெற்றோர், “ஏற்கெனவே என் மகளின் தோழிகள் சிலர் தற்கொலை செய்துள்ளனர்.

இந்த டீன் ஏஜ் வயதினருக்கு, வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்வது எப்படி என்பதை போதிக்காமல், இதுபோன்று தற்கொலை கடிதம் எழுதச் சொல்வது எந்த விதத்தில் நியாயம்? இந்த வீட்டு பாடம் என் மகளுக்கு மிகுந்த மன வேதனையை அளித்துள்ளது’ என்று ஆதங்கத்துடன் தெரிவித்தார்.

இந்நிலையில் பள்ளி முதல்வர் கரோலின் ராபர்ட்ஸ், “பெற்றோர்களை நேரில் சந்தித்து மன்னிப்பு கேட்டுள்ளோம். குறிப்பிட்ட ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.