சென்னை: மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தனது மகனை எம்.பி.யாகும் முயற்சியில், திருச்சி தொகுதி வேட்பாளராக அறிவித்துள்ளார். இதனால் விரக்தி அடைந்த தற்போதைய மதிமுக எம்.பி.யான ஈரோடு கணேசமூர்த்தி தற்கொலை முயற்சி மேற்கொண்டதாக தகவல்கள் பரவி வருகின்றன. தற்போது அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது மதிமுகவில் சலசலப்பை ஏற்றபடுத்தி உள்ளது.

கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலின் போது, திமுக சார்பில் மதிமுகவுக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டு, அதில் கணேசமூர்த்தி உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். கடந்த ஒரு வார காலத்திற்கும் மேலாக கணேசமூர்த்தி மனஉளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், திடீர் உடல் நலக்குறைவு காரணமாக, அவர் ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு முதலுதவி சிகிச்சைக்குப் பின்னர், மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்தவிவகாரம் மதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

வாரிசு அரசியலுக்கு  எதிராக போர்கொடி தூக்கி, திமுகவில் இருந்து விலகி தனிக்கட்சி தொடங்கியவர் வைகோ. ஆனால்,  அவரும், மற்ற அரசியல் கட்சி தலைவர் களை போல தனது மகனையும் கட்சியில் இணைத்து, பதவி கொடுத்து அழகு பார்த்ததுடன், அவரை எம்.பி.யாக்கும் நோக்கில்,  திமுக கூட்டணியில் இணைந்து, ஒரே ஒரு தொகுதியை பெற்று அந்த தொகுதியில் தனது மகனான துரை வையாபுரியை வேட்பாளராக அறிவித்து உள்ளார். வைகோவின் இந்த அரசியல் நடவடிக்கை மதிமுக தொண்டர்கள் மட்டுமின்றி தலைவர்களிடையேயும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

வைகோவின் செயலாளர், கடுமையான மன உளைச்சலுக்கு ஆளான ஈரோடு மக்களவைத் தொகுதியின் உறுப்பினர் கணேசமூர்த்தி தற்கொலைக்கு முயன்றதாக தகவல்கள் பரவின. ஆனால், மனஉளைச்சல் காரணமாக நெஞ்சுவலி ஏற்பட்டு, கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எது உண்மை என்பது தெரியவில்லை.

இந்த நிலையில், வைகோவின் மகனும், திருச்சி நாடாளுமன்ற வேட்பாளரும்,  மதிமுக முதன்மைச் செயலாளரான துரை வைகோ, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கணேசமூர்த்தியை நேரில் சென்று பார்த்து அவரது குடும்பத்தினரிடம் நலம் விசாரித்ததார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது,  “நாடாளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தி உடல்நலமின்றி, அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கவலைக்கிடமாக உள்ளார், அவருக்கு எக்மோ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 24-48 மணி நேரம் கடந்து தான் எதையும் சொல்ல முடியும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். இருதய சிகிச்சைகள் செய்யப்பட்டு வருகிறது, பிற உறுப்புகளுக்கான ஆய்வறிக்கைகள் வந்தால் தான் முழுமையாக சொல்ல முடியும்.

சரியான நேரத்தில் கொண்டு வரப்பட்டு சிகிச்சைக்கு சேர்த்துள்ளதால், காப்பாற்ற வாய்ப்புகள் இருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். ஈரோட்டிலேயே வயிறு சுத்தம் செய்யப்பட்டு கொண்டு வரப்பட்டுள்ளது. ரத்தத்தில் கலந்துள்ளதால் தான் இந்தளவு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதற்கான எக்மோ சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது. மேலும், அனைவரும் நம்பிக்கையுடன் இருக்கிறோம்” என கூறியுள்ளார்.