டில்லி

பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி அயோத்தி ராமர் கோவில் குறித்து புதிய சர்ச்சையைக் கிளப்பி உள்ளார்.’

சுப்ரமணியன் சுவாமி பாஜகவின் மூத்த தலைவராக இருந்தாலும் அவ்வப்போது பாஜகவிற்கு எதிராக சில கருத்துகளை தெரிவித்து வருகிறார். இந்த கருத்துக்களில் ஒன்றாக அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலுக்கும் பிரதமர் மோடிக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று அவர் கூறியிருப்பது சர்ச்சையாகி உள்ளது.

வரும் 22 ஆம் தேதி அயோத்தி ராமர் கோவிலில் சிலைப் பிரதிஷ்டையை மத்திய அரசு கோலாகலமாக நடத்த பல்வேறு ஏற்பாடுகளை செய்து வருகிறது.  இந்நிலையில், பிரதமர் மோடிக்கும் அயோத்தி ராமர் கோவிலுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று கருத்துக் கூறி சுப்ரமணியன் சுவாமி சர்ச்சையை கிளப்பி விட்டுள்ளார்.

அவர் தனது எக்ஸ் பக்கத்தில்,

”பிரதமர் மோடி அயோத்தியில் ராமர் கோவிலை அவரே கட்டியதுபோல காட்டிக் கொள்கிறார்.  ஆனால் உண்மையில் இதில் மோடியின் பங்கீடு ஜிரோ தான். பிரதமர் மோடி தனது தொகுதியான வாரணாசியில் கவனம் செலுத்த வேண்டும். அங்கு ஞானவாபி மசூதி இருக்கும் இடத்தில் காசி ஜோதிர்லிங்க் கோவில் கட்டுவதில் கவனம் செலுத்த வேண்டும்”

என்று பதிவிட்டுள்ளார்.