சென்னை,

ஜெயலலிதா சமாதியில், மாணவர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழகத்தில் நீட் தேர்வுக்கு எதிர்ப்பு காரணமாகவும், இதன் காரணமாக மாணவி அனிதா தற்கொலைக்கு நீதி கேட்டும் மாணவர்கள் போராட்டம் நடைபெற்று வருகிறது.

இதையடுத்து சென்னை மெரினாவில் போராட்டம் நடைபெறும் என்று சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வந்தது.

இந்நிலையில் இன்று பிற்பகல் சுமார் 2 மணி அளவில் மாணவர்கள், மாணவிகள் சிலர் ஜெயலலிதா சமாதிக்கு வந்து, சமாதி முன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

சுமார் 50க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பார்வையாளர்கள் போல், வந்து சமாதி முன் அமர்ந்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக அந்த பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது. போலீசார்  குவிக்கப்பட்டு உள்ளனர்.

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மாணவ மாணவிகளை  அங்கிருந்து அகற்ற போலீசார் முயற்சித்து வருகின்றனர்.