சந்திரனுக்குக் கிடைத்த சாபம்..

ஒருமுறை, சந்திரன் கயிலைக்குச் சென்றிருந்த போது,  அங்கு விநாயகர் விளையாடிக் கொண்டு இருந்ததைப் பார்த்தான். விநாயகர் குதித்துக் குதித்து விளையாடுவதற்கு ஏற்ப, அவரின் தொந்தியும் குலுங்கிக் கொண்டிருந்த து அதைப் பார்த்ததும், சந்திரனுக்குச் சிரிப்பு வந்துவிட்டது. விநாயகரைப் பார்த்து கேலியாக சிரித்தான். அந்தச் சிரிப்பு விநாயகருக்குக் கோபத்தை வரவழைத்துவிட்டது. உடனே, “நீ தேய்ந்து மறையக்கடவாய்”  எனச் சந்திரனைச் சபித்துவிட்டார்.

சந்திரன் மறைந்ததால், உலகம் இருளில் மூழ்கியது. தேவர்கள் விநாயகரைச் சரண் புகுந்தார்கள். தன் தவற்றுக்கு வருந்திய சந்திரனும் தன்னை மன்னிக்குமாறு வேண்டித் தவம் புரிந்தான். மனம் இரங்கிய விநாயகர், சந்திரனைத் தன் தலையில் சூடிக்கொண்டார்.

பாலசந்திரன் என்ற பெயருடன் அருள்பாலித்து சந்திரனுக்கு வளரும் தன்மையைத் தந்தார். அதாவது, 15 நாட்கள் மெல்லத் தேய்ந்து (தேய் பிறை), பின்பு 15 நாட்கள் மெள்ள வளரும்படியான (வளர் பிறை) வரத்தை அருளினார். அப்படி, சந்திர பகவான் வரம் பெற்ற நாள் தேய்பிறை சதுர்த்தி.

“சங்கட_ஹர” என்றால், “சங்கடத்தை (துன்பத்தை) நீக்குதல்.”  என்று பொருள். உலக வாழ்வில் நாம் செய்த கர்ம வினையின் பலனாக வரும் எல்லாவித இன்னல்களையும் போக்கி, அளவில்லாத நன்மைகளைத் தருவதால் சங்கட ஹர சதுர்த்தி விரதம்  போற்றப்படுகிறது.

சங்கடஹர சதுர்த்தி மாதம்தோறும் வரும் என்றாலும், விநாயகர் அவதரித்த ஆவணி மாதத்தில் பௌர்ணமிக்குப் பிறகு வரும் தேய்பிறை சதுர்த்தி, மகா சங்கடஹர சதுர்த்தி என்று கூடுதல் சிறப்புப் பெறுகிறது. அன்றைய தினத்தில் விநாயகரை வணங்கி, வழிபடுவோருக்கு, சகலவிதமான சங்கடங்களும் விலகும்; சந்தோஷம் பெருகும்.