ஜெனிவா:  ஐ.நா. சபை தலைமையகத்தில் மகாத்மா காந்தி சிலை டிசம்பர் மாதம் 14ந்தேதி திறக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தலைவர் பொறுப்பை இந்தியா டிசம்பர் மாதம் ஏற்கிறது. இதையொட்டி மகாத்மா காந்தியின் மார்பளவு சிலை ஒன்றை ஐ.நா.வுக்கு இந்தியா பரிசளித்துள்ளது. இந்த சிலை ஐ.நா. தலைமையகத்தின் வடபகுதியில் உள்ள புல்வெளியில் நிறுவப்படுகிறது.

இந்த சிலை திறப்பு விழா அடுத்த மாதம் (டிசம்பர்)  14-ம் தேதி திறக்கப்பட உள்ளது. இந்த நிகழ்ச்சியில் மத்திய வெளியுறவு மந்திரி கலந்துகொள்ள உள்ளதாகவும், அப்போது சிலை திறப்பு விழா நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த சிலை திறப்பு விழாவில் ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் மற்றும் பாதுகாப்பு கவுன்சிலின் 15 உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.  இதன்மூலம் ஐ.நா. தலைமையகத்தில் முதல் முறையாக மகாத்மா காந்தி சிலை இடம்பெறுகிறது.

இந்திய அரசு ஐ.நா.வுக்கு வழங்கியுள்ள  மகாத்மா காந்தி சிலையை புகழ்பெற்ற சிற்பியும், பத்மஸ்ரீ விருது பெற்றவருமான ராம் சுதர் வடிவமைத்துள்ளார்.  முன்னதாக, கடந்த 1982-ம் ஆண்டு சூரிய கடவுளின் சிலை ஒன்றை இந்தியா ஐ.நா.வுக்கு பரிசளித்து இருந்தது. இந்த தகவல்களை ஐ.நா.வுக்கான இந்தியாவின் பிரதிநிதி ருச்சிரா கம்போஜ் தனியார் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.