சென்னை:

முதல்வர் பழனிச்சாமிக்கு ஆதரவாக பஞ்சோந்தியாக மாறி தேர்தல்ஆணையர் பழனிச்சாமி இன்று தேர்தல் தேதியை அறிவித்துள்ளதாக குற்றம் சாட்டிய திமுக தலைவர் ஸ்டாலின், அதிமுக தலைமை அலுவலகத்தின் ஒரு மூலை யில் தன் அலுவலகத்தையும் நடத்திக் கொள்ளலாம் என்கிற அளவிற்கு தேர்தல் ஆணையம் தரம் தாழ்ந்திருக்கிறது என்று கடுமையாக சாடி உள்ளார்.

மேலும், உள்ளாட்சி தேர்தலில் .மாபெரும் வெற்றியைக் குவித்து, அதிமுக அரசின் முகத்தில் கரியைப் பூச திமுக-வும், கூட்டணி கட்சிகளும், மக்களும் தயார் நிலையில், இருப்பதாகவும்,  “முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், அவரது அமைச்சரவை சகாக்களும் எத்தனை அதிகார துஷ்பிரயோகங்களுடன் களத்திற்கு வந்தாலும், அவர்கள் முகத்தில் கரி பூச மக்கள் தயாராகி உள்ளனர் என்றும் தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

முதலமைச்சர் ‘எடப்பாடி’ திரு. பழனிசாமிக்குக் குற்றேவல் புரியும் ‘எடுபிடி’ ஆணையமாக, மற்றொரு பழனிசாமி என்பவரின் தலைமையில் இயங்கும், தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம் பச்சோந்தியாக மாறி – எந்த சட்ட விதிமுறைகளையும் கடைப்பிடிக்காமல், நகர்ப்புற அமைப்புகளைத் தவிர்த்துவிட்டு, டிசம்பர் 27, 30 ஆகிய தேதி களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு மட்டுமே – உள்ளாட்சித் தேர்தல் நடக்கும் என்று அறிவித்துள்ளதற்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

மூன்று வருடங்களாக உள்ளாட்சித் தேர்தலை நடத்த முதுகெலும்பு இல்லாத இந்த ஆணையமும், அ.தி.மு.க. அரசும் இன்றைக்கு முழுமையாக அனைத்து அமைப்புகளுக்கும் உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்குக் கூட வக்கில்லா மல், திக்குத் தெரியாமல் திணறி, விழி பிதுங்கி நிற்பது வெட்கக் கேடானது. “எங்களுக்கு தேர்தலைச் சந்திக்க திராணி இருக்கிறது” – “தெம்பு இருக்கிறது” என்று அரசு மேடைகளில் வீராவேசம் பேசிய முதலமைச்சர் திரு. பழனிசாமி, சில நாட்களிலேயே அந்தர் பல்டி அடித்து, “அத்து மீறிய அரசு அதிகாரம்” என்ற மயக்கத்தில் இருந்து கொண்டு – ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு மட்டுமே தேர்தலை நடத்துங்கள் என்று மாநில தேர்தல் ஆணையத்திடம் கெஞ்சிக் கூத்தாடி இருப்பது, மக்களைச் சந்திக்க திரு. பழனிசாமிக்கு உள்ள அச்சத்தையும் மனநடுக்கத்தையும் எடுத்துக் காட்டுகிறது.

உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கு தேர்தல் ஆணையமும், அதிமுக அரசும் மாறி மாறி ‘வாய்தா’ வாங்கி – பெய்யாத மழைக்கு ஒரு முறை ‘ரெட் அலெர்ட்’ என்று பொய்யாக அறிவிப்பு வெளியிட்டு உள்ளாட்சித் தேர்தலைத் தள்ளி வைத்து, நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளை எல்லாம் சந்தித்தார்கள். பல்வேறு காலக்கட்டங்களில் உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றத்தின் சரமாரியான குட்டுகளையும் கண்டனங்களையும் வாங்கியும், முதலமைச்ச ரும் திருந்தவில்லை; மாநில தேர்தல் ஆணையரும் தவறுகளைத் திருத்திக் கொள்ளவில்லை. ஆகவே, இனி மாநில தேர்தல் ஆணையத்திற்கு தனி அலுவலகம் தேவையில்லை. அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தின் ஒரு மூலையில் தனது அலுவலகத்தையும் நடத்திக் கொள்ளலாம் என்கிற அளவிற்கு தேர்தல் ஆணையம் ஐக்கியப் படுத்திக் கொண்டு, தரம் தாழ்ந்து தகுதி இழந்திருக்கிறது.

உயர்நீதிமன்ற நீதிபதிக்குரிய பணிப் பாதுகாப்பு உள்ள மாநில தேர்தல் ஆணையர் தன் நிலை மறந்து – இப்படி ஆளுங்கட்சியின் ஏவலாளாக மாறி, பஞ்சாயத்து ராஜ் சட்டத்தையும், ஜனநாயகத்தையும் காலில் போட்டு மிதித்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.

துவக்கத்திலிருந்தே அரசும், தேர்தல் ஆணையமும் கைகோர்த்து, சதித் திட்டமிட்டு, குளறுபடிகளைச் செய்தன. மாவட்டங்களைப் பிரித்து – அந்த மாவட்டங்களில் வார்டு மறுவரையறை செய்யவில்லை. பட்டியலின, பழங்குடியின மற்றும் பெண்கள் ஆகியோருக்கு இடஒதுக்கீட்டைச் செய்யவில்லை. மாவட்டங்களுக்கு செய்த துரோகம் தவிர, நேரடித் தேர்தலுக்குப் பதில் மறைமுகத் தேர்தல் என்று அவசரச் சட்டம் பிறப்பித்தார்கள். “சட்டப்படியான நடைமுறைகளை முடித்து உள்ளாட்சித் தேர்தலை அறிவிக்க வேண்டும்” என்ற உச்சநீதிமன்ற உத்தரவை மீறி உள்ளார்கள்.

தி.மு.க. உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் ‘வார்டு மறுவரையறை’ குறித்து முன்வைத்த கோரிக்கைகளை நிராகரித்துள்ளார்கள். ஜனநாயகத்திற்கு விரோதமாக அனைத்து நடவடிக்கை களையும் எடுத்து – இரு மாவட்டங் களுக்கு ஒரு ‘மாவட்ட பஞ்சாயத்துத் தலைவர்’, ‘ஒரு யூனியனுக்கு இரண்டு அல்லது மூன்று மாவட்ட ஆட்சி தலைவர்கள்’, ‘இரு அல்லது மூன்று மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்கள்’ என்று நிர்வாக அலங்கோலத்தின் மொத்த உருவமாக இந்த ஊரக உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது கேவலமானது. ஒரு மாவட்டப் பஞ்சாயத்திற்கு எந்த மாவட்ட நிர்வாகத்திலிருந்து நிதி ஒதுக்கப்படும் என்ற தெளிவுகூட இல்லை. பஞ்சாயத்து ராஜ் சட்டப்படி செயல்பட முடியாத ஒரு மாநிலத் தேர்தல் ஆணையர் தமிழ்நாட்டிற்குத் தேவையா என்ற முக்கிய கேள்வியே எழுந்துள்ளது.

மாநில தேர்தல் ஆணையர் பழனிச்சாமி

‘உள்ளாட்சித் தேர்தலுக்கு யாராவது நீதிமன்றம் சென்று தடை பெற வேண்டும்’ என்பது அ.தி.மு.க. அரசின் உள்நோக்கமாகவும் ஆசையாகவும் இருந்தாலும், திராவிட முன்னேற்றக் கழகம் ஜனநாயகத்தின் மீது உறுதியான நம்பிக்கை வைத்திருக்கிறது. ஆகவே, ‘அதிகாரம்’ – ‘மாநில தேர்தல் ஆணையம்’ – ‘பொங்கலுக்கு ஒன்றரை மாதங்களுக்கு முன்பே 1000 ரூபாய் விநியோகம்’ போன்ற எத்தனை அதிகார துஷ்பிரயோகங்களுடன் – எடப்பாடி திரு. பழனிசாமியும், அவரது அமைச்சரவை சகாக்களும் களத்திற்கு வந்தாலும், திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான கூட்டணிக் கட்சிகள் சந்திக்கும்.

அதுமட்டுமின்றி, மக்களின் பேராதரவுடன் ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் தேர்தலில் மாபெரும் வெற்றியைக் குவித்து, அ.தி.மு.க. அரசின் முகத்தில் கரியைப் பூச திராவிட முன்னேற்றக் கழக உடன்பிறப்புகளும், கூட்டணி கட்சியினரும், மக்களும் தயாராகவே இருக்கிறார்கள் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.