சென்னை: தமிழ்நாட்டில் ஜனவரி 4ந்தேதி (நாளை மறுதினம்) 3வது கட்டமாக குழந்தைகளுக்கான போலியோ தடுப்பூசி போடப்படஉ ள்ளது. இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

ஜனவரி 4, 2023 முதல், அனைத்து குழந்தைகளும் ஒன்பது முதல் பன்னிரெண்டு மாதங்கள் ஆகும் போது, மூன்றாம் டோஸ் ஃப்ராக்ஷனல் இன்ஆக்டிவேட்டட் போலியோ தடுப்பூசி (fIPV) தடுப்பூசியைப் பெறுவார்கள் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

 தேசிய தடுப்பூசி அட்டவணையின் கீழ் போலியோ 3-வது தவணை தடுப்பூசி வழங்கும் திட்டம் தமிழகத்தில் வரும் 4-ந்தேதி தொடங்கப்பட உள்ளதாக பொது சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் செல்வ விநாயகம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர்  அனைத்து மாவட்ட சுகாதார அலுவலர்களுக்கும் அவர் அனுப்பி உள்ள சுற்றறிக்கையில், சுகாதார திட்டங்களை செயல்படுத்துவதில் முதன்மை மாநிலமாக தமிழகம் விளங்கி வருகிறது. குறிப்பாக குழந்தைகளுக்கும், கர்ப்பிணிகளுக்கும் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. ஆண்டுக்கு 10 லட்சம் கர்ப்பிணிகளுக்கும் 9 லட்சம் குழந்தைகளுக்கும் தடுப்பூசிகள் தமிழகத்தில் வழங்கப்பட்டு வருகின்றன.

பிறந்த குழந்தைகளுக்கு இரு தவணைகளாக 6-வது வாரத்திலும், 14-வது வாரத்திலும் போலியோ தடுப்பூசி வழங்கப்படுகிறது. இதை தவிர போலியோ இல்லாத மாநிலமாக தமிழகம் உருவெடுத்தாலும் முன் எச்சரிக்கையாக பிறந்த குழந்தைகளுக்கு 9-ல் இருந்து 12 மாதங்களுக்குள் 3-ம் தவணையாக போலியோ தடுப்பூசி வழங்க மத்திய அரசு முடிவு செய்தது.

அதன் அடிப்படையில் தமிழகத்தில் வரும் 4-ந்தேதி முதல் வழக்கமான தடுப்பூசிக்காக வரும் குழந்தைகளுக்கு தகுதியின் அடிப்படையில் 3-ம் தவணை போலியோ தடுப்பூசி வழங்க வேண்டும். இதற்கான நடவடிக்கைகளை மாவட்ட சுகாதார அலுவலர்கள் முன்னெடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.