ஜியோவுக்கு போட்டியாக வரும் ஸ்டார்லிங்க்.. முகேஷ் அம்பானி Vs எலான் மஸ்க்.. இனி ஆட்டமே வேற..!
நெட்டிசன் ஜெயப்பிரகாஷ் பத்ம சிவசங்கரன் முகநூல் பதிவு
எலான் மஸ்க்
உலகப் பணக்காரர்கள் பட்டியலில் ஒரே வருடத்தில் 15வது இடத்தில் இருந்து முதல் இடத்திற்கு முன்னேறிய எலான் மஸ்க் ஒருபக்கம் எலக்ட்ரிக் கார், விண்வெளி ஆராய்ச்சி, சோலார் என முக்கியமான திட்டங்களில் பணியாற்றி வந்தாலும், உலக மக்கள் அனைவருக்கும் மிகவும் குறைவான கட்டணத்தில் அதிவேக இண்டர்நெட் சேவையை எவ்விதமான தடையும் இல்லாமல் அளிக்க வேண்டும் என்பது எலான் மஸ்க்-ன் மிகப்பெரிய கனவுத் திட்டம்.
 இந்த மாபெரும் கனவு திட்டத்தின் வெற்றி தான் ஸ்டார்லிங்க். யாருடைய உதவியும் இல்லாமல், எந்த நிறுவனத்துடனும் கூட்டணி வைக்காமல், தனது ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் துணையுடன் உருவாக்கிய திட்டம் தான் இந்த ஸ்டார்லிங்க்.
எலான் மஸ்க்-ன் ஸ்டார்லிங்க் திட்டம் அமெரிக்கா, பிரிட்டன், கனடா ஆகிய நாடுகளில் இருக்கும் வேளையில், தற்போது இந்தச் சேவையை இந்தியாவிற்கு விரிவாக்கம் செய்யத் திட்டமிட்டு உள்ளார் எலான் மஸ்க். இந்தியாவில் டெலிகாம் சேவை மூலம் பெரும் அளவிலான வர்த்தகத்தைப் பெற்று வரும் முகேஷ் அம்பானிக்கு இது பெரும் பின்னடைவாக இருக்கும்.
பிராண்ட்பேண்ட் சேவை:
பொதுவாக நாம் பயன்படுத்தும் இண்டர்நெட் சேவை அனைத்தும் டெலிகாம் நிறுவனங்கள் வாயிலாகவும், Sea cable வாயிலாகவும் தான் இணைப்பைப் பெறுகிறோம். இதன் மூலம் டெலிகாம் சிக்னல் டவர்களைப் பொருத்து தான் நம் இண்டர்நெட் இணைப்பின் வேகம் இருக்கும். இந்த அமைப்பிற்கு மிகப்பெரிய அளவில் செலவு செய்ய வேண்டி உள்ளது.
குறிப்பாகப் பிராண்ட்பேண்ட் சேவை பெற வேண்டும் என்றால் கேபிள் வாயிலாகத் தான் பெற வேண்டும், அதிலும் அதிக வேகம் கொண்ட இணைப்பும் வேண்டும் என்றால் பைபர் ஆப்டிக் கேபிள் கட்டாயம்.
ஸ்டார்லிங்க் ஒரு அற்புதம்:
ஆனால் ஸ்டார்லிங்க் முற்றிலும் மாறுபட்டது, எலான் மஸ்க்-ன் இந்தக் கனவு திட்டத்தில் இண்டர்நெட் இணைப்பை செயற்கைக்கோள்-ல் இருந்து நேரடியாக நம் வீட்டிற்கே நேரடியாகப் பெற முடியும். இதனால் எந்த டெலிகாம் நிறுவனத்தையும் நம்பியிருக்கத் தேவையில்லை, இதுமட்டும் அல்லாமல் இந்தச் சேவையைப் பெறுவதும் மிகவும் எளிது.
ஒரே ஒரு Antenna வாங்கினால் போது, 24X7 மணிநேரமும் எவ்விதமான தடையும் இல்லாமல் செயற்கைக்கோள்-ல் இருந்து நேரடியாக இண்டர்நெட் சேவையைப் பெறலாம்.
இந்தியாவிற்கு வரும் ஸ்டார்லிங்க்:
இந்தப் புதிய தொழில்நுட்பம் வாயிலான இண்டர்நெட் சேவையைத் தற்போது எலான் மஸ்க்-ன் Space Exploration Technologies Corp அமெரிக்கா பிரிட்டன், கனடா ஆகிய நாடுகளில் மட்டுமே அளித்து வரும் நிலையில் இச்சேவையை அதிக டெலிகாம் வாடிக்கையாளர்கள் கொண்ட இந்தியா மற்றும் சீனாவிற்கு விரிவாக்கம் செய்யத் திட்டமிட்டு உள்ளதாகத் தெரிவித்துள்ளது.
1 டிரில்லியன் டாலர் சந்தை:
இந்தியா மற்றும் சீனாவில் விரிவாக்கம் செய்வதன் மூலம் இண்டர்நெட் சேவை இல்லாத கிராம், மலைவாழ் மக்கள் என அனைத்து தரப்பினரும் அதிவேக இண்டர்நெட் சேவை பெற முடியும். இதுமட்டும் அல்லாமல் ஸ்டார்லிங்க் சேவை தற்போது விமானத்திற்குள் பயன்படுத்தவும், கடற்பயண சேவைகளுக்கும் பயன்படுத்தும் வகையில் விரிவாக்கம் செய்ய முடிவு செய்துள்ளது.
இதன் மூலம் ஸ்டார்லிங்க் நிறுவனம் சுமார் 1 டிரில்லியன் டாலர் சந்தைக்குள் நுழைந்துள்ளது.
அமெரிக்காவில் ஸ்டார்லிங்க்:
அமெரிக்காவில் இந்த ஸ்டார்லிங்க் பெற 500 டாலரைக் கொண்டு ஒரு டிஷ் டிவி Antenna போன்ற ஒன்றை வாங்க வேண்டும். இதன் பின் மாதம் 99 ரூபாய் விலையில் அதிவேக இண்டர்நெட்-ஐ எவ்விதமான தடையும் இல்லாமல் பெற முடியும். அமெரிக்காவில் தற்போது இருக்கும் இண்டர்நெட் சேவையை விடவும் மிகவும் குறைவானது என்பது குறிப்பிடத்தக்கது.
ரிலையன்ஸ் ஜியோ:
இந்தியாவில் ஸ்டார்லிங்க் சேவை அறிமுகம் செய்வதன் மூலம் இந்திய டெலிகாம் நிறுனங்களின் பிராண்ட்பேன்ட் சேவை வர்த்தகம் பெரிய அளவில் பாதிக்கப்படும். குறிப்பாக இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் ரிலையன்ஸ் ஜியோ பெரும்பாலான தனது முக்கிய டிஜிட்டல் சேவைகளைப் பிராண்ட்பேன்ட் சேவையை நம்பிதான் வர்த்தகத்தைக் கட்டமைத்து வருகிறது. இந்நிலையில் ஸ்டார்லிங்க்-ன் வருகை ஜியோவிற்குப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.
செயற்கைக்கோள்
ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் இதுவரை ஸ்டார்லிங்க் சேவைக்காகச் சுமார் 1000 செயற்கைகோள்கை விண்ணில் செலுத்தியுள்ளது. தனது பால்கன் 9 ராக்கெட்-ல் ஒரு முறை 60 செயற்கைக்கோள் எனக் கணக்கீட்டில் 17 முறை விண்ணில் செலுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
உலகம் முழுவதும் இதுபோன்ற சேவையை அளிக்கச் சுமார் 4400 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்த வேண்டும்.