புதுடெல்லி:
ன்று டெல்லி செல்லும் தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின், ஜனாதிபதி திரவுபதி முர்முவைச் சந்தித்து மருத்துவமனை திறப்பு விழாவிற்கு அழைப்பு விடுக்கவுள்ளார்.

தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் நாளை இரவு 8 மணியளவில் சென்னையில் இருந்து புறப்பட்டு டெல்லி செல்கிறார். நாளை மறுதினம் ஜனாதிபதி திரவுபதி முர்முவைச் சந்தித்து, கிண்டியில் அமைக்கப்பட்டுள்ள பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையை திறந்து வைக்க அழைப்பு விடுக்கிறார்.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சென்னை, கிண்டியில் உள்ள கிங் நோய் தடுப்பு மற்றும் ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை ஒன்று அமைக்கப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் கடந்த 2021 ஆம் ஆண்டு அறிவித்தார்.

அதன்படி, இம்மருத்துவமனைக் கட்டடம் தரைத்தளம் மற்றும் 6 மேல் தளங்களுடன் சுமார் 51, 429 சதுரமீட்டர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது. இம்மருத்துவமனையில் இருதயம் மற்றும் நெஞ்சக அறுவை சிகிச்சைத் துறை, மூளை நரம்பியல் அறுவை சிகிச்சைத் துறை, இரத்தநாள அறுவை சிகிச்சைத் துறை, குடல் மற்றும் இரைப்பை அறுவை சிகிச்சைத் துறை, புற்றுநோய் அறுவை சிகிச்சைத் துறை, சிறுநீரக அறுவை சிகிச்சைத் துறை போன்ற உயர் சிறப்பு பிரிவுகளைக் கொண்டுள்ளது.

இம்மருத்துவமனையின் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்த நிலையில், முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் இன்று இரவு  சென்னையிலிருந்து புதுடெல்லி புறப்பட்டுச் சென்று, நாளை குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவை சந்தித்து, கலைஞர் நூற்றாண்டையொட்டி சென்னை, கிண்டியில் உள்ள கிங் நோய் தடுப்பு மற்றும் ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் 230 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 1000 படுக்கைகளுடன் கூடிய பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையை திறந்து வைத்திட அழைப்பு விடுக்கிறார்.