சென்னை:

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மழையால் பாதிக்கப்பட்ட நீலகிரி மாவட்டத்துக்கு சென்று  பார்வையிட்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். இதுகுறித்து கருத்து தெரிவித்த தமிழக முதல்வர், ஸ்டாலின் சீன் போடுகிறார் என்ற விமர்சித்திருந்தார்.

இந்த நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த ஸ்டாலின்,  நீலகிரி மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களை நான் சென்று பார்த்தது சீன் போட என்றால், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அமெரிக்கா மற்றும் லண்டன் செல்வதும் சீன் போடவா என கேள்வி எழுப்பினார்.

கேரளாவில் மழையல் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, தி.மு.க மேற்கு மாவட்டம் சார்பாக 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான நிவாரணப் பொருட்களை திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத் தில்  தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து வழி அனுப்பி வைத்தார்.

அதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின்,  கேரளா மாநிலம் கடும் வெள்ளத்தால் பல்வேறு பகுதிகளில் கடுமையாக பாதிக்கபட்டுள்ளது. அங்குள்ள பொது மக்கள் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். எனவே இது குறித்து தி.மு.க சார்பில் முடிந்த அளவிற்கு கேரள மக்களுக்கு உதவி செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுத்திருந்தேன்.

அதனை ஏற்று இன்று முதல் கட்டமாக சென்னை மேற்கு மாவட்டம் சார்பில் கேரளாவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களாக 10 லட்ச ரூபாய் மதிப்பில் நிவாரண பொருட்களை அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் இருந்து இதுபோன்ற நிவாரண பொருட்களை வர இருக்கிறது, வரும் பொருட்கள் கேரளாவுக்கு அனுப்பி வைக்கப்படும் என்றார்.

மேலும், முதலமைச்சர்  எடப்பாடி பழனிசாமி தகுதிக்கு மீறி விமர்சனம் செய்கிறார் என்று கூறியவர்,   நான் நீலகிரி மாவட்டத்துக்கு  சீன் காட்ட சென்றதாக விமர்சித்திருக்கிறார். அப்போ, லண்டன் போகக்கூடிய முதலமைச்சர் அங்கு சீன் காட்ட போகிறார் என்று நான் சொல்ல எவ்வளவு நேரம் ஆகும் என்று எதிர்க்கேள்வி விடுத்தார்.

அவரைப் போல பொறுப்பில் இருந்து பதவியை மறந்து இவ்வளவு கீழ்த்தரமாக நான் பேச மாட்டேன் என தெரிவித்த ஸ்டாலின், கோவை வரை வந்த முதலமைச்சர் மழை மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட  நீலகிரிக்கு செல்லவில்லை  எனவும் குற்றம் சாட்டினார்.