கொழும்பு: இலங்கை கடற்படையினர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்ட ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் 6 பேரை அந்நாட்டு நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டு உள்ளது.

கடந்த மாதம் (ஜனவரி ) 22ந்தேதி நெடுந்தீவு நாடு கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டதாக கூறி தமிழக மீனவர்கள் 6 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர் . அவர்களது இரண்டு மீன்பிடி இழுவை படகுகளையும் கடற்படையினர்  டெல்ஃப்ட் தீவில் நிறுத்தப்பட்டன. இந்த படகுகள், ராமேஸ்வரம் தங்கச்சிமடத்தைச் சேர்ந்த ஏ.ஐசக் மற்றும் எஸ்.ஆரோக்கியதாஸ் ஆகியோரின் மீன்பிடிபடகுகள். கைது செய்யப்பட்ட 6 மீனவர்களில் ஐசக் மற்றும் ஆரோக்கியதாஸ் உள்ளிட்டோர் உள்ளனர். மற்ற படக்குழுவினர் ஏ சிசெரியன், எஸ் சமாதானபாபு, எம் நிஷாந்த் மற்றும் முருகேசன் ஆகியோர் ஆவர்.

கைது செய்யப்பட்ட 6 மீனவர்களையும், இலங்கை கடற்படையில்,  ஊர்க்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டனர். இதையடுத்து மீனவர்கள் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு மத்தியஅரசுக்கு தெரிவித்து, தமிழக மீனவர்களை விடுக்க கோரியது. அதைத்தொடர்ந்து மத்திய வெளியுறவுத்துறை இலங்கை அரசுக்கு விடுதலை செய்ய அறிவுறுத்தியது.

இந்த நிலையில்,  கடந்த 22ம் தேதி இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட மீனவர்கள், இன்று மீண்டும்  ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது நீதிபதி தமிழக மீனவர்களை எச்சரிக்கை செய்து, விடுதலை செய்ய உத்தரவிட்டார். இதையடுத்து, சிறையில் இருந்து விடுவிக்கப்படும் தமிழக மீனவர்கள் ஓரிரு நாளில் தமிழ்நாடு வந்தடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.