கொழும்பு:  இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு  காரணமொன ராஜபக்சே குடும்பத்தினருக்கு எதிராக இலங்கை மக்கள் நடத்தி வந்த தொடர் போராட்டத்தின் பயனாக ஏற்கனவே பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சே மற்றும் அமைச்சர் பதவியில் இருந்த அவரது குடும்பத்தினர் பதவி விலகிய நிலையில், இன்று  இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே தனது அதிபர் பதவியை ராஜினாமா செய்தார். இதை  இலங்கை பிரதமர் அலுவலகம் உறுதி செய்துள்ளது.

கொழும்பில் மக்கள் போராட்டம் தீவிரமடைந்த நிலையில் கடந்த 9ந்தேதி (வெள்ளிக்கிழமை) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரை பதவி விலகக் கோரி கொழும்பில் மாபெரும் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தின்போது,   ஜனாதிபதி மாளிகை மற்றும் ஜனாதிபதி செயலகம் என்பன ஆர்ப்பாட்டக்காரர்களால் கைப்பற்றப்பட்டிருந்தன. இதையடுத்து அதிபர் கோத்தபய ராஜபக்சே, அதிபர் மாளிகையில் இருந்து தப்பி ஓடினார். போராட்டக்காரர்கள் அதிபர் மாளிகைகளுக்குள் புகுந்து அதகளம் செய்தனர். தொடர்ந்து ரணில் விக்கிரமசிங்கே வீட்டுக்கும் தீ வைக்கப்பட்டது. கோத்தபய ராஜபக்சே  எங்கிருக்கிறார் என்ற தகவல்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.

இந்த நிலையில், கோத்தபய ராஜபக்சே பதவி விலக கோரி இன்று நாடு முழுவதும் முழு கடையடைப்பு போராட்டம் நடைபெற உன அறிவிக்கப் பட்டிருந்தது. தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன அமைப்புக்களின் ஒன்றியம் நடத்திய குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் இதை அறிவித்தார்.

இந்த நிலையில், அதிபர் பதவியில் இருந்து ராஜினாமா செய்வதாக கோத்தபயராஜபக்சே அறிவித்து உள்ளார். முன்னதாக ஜூலை 13ஆம் திகதி தனது பதவியை இராஜினாமா செய்வதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச சபாநாயகருக்கு அறிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியிருந்த நிலையில், தற்போது அதிபர் பதவியை ராஜினாமா செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.