ராமேஸ்வரம்: தமிழக மீனவர்களை கைது செய்து வரும் இலங்கை அரசு, சமீப காலமாக தமிழக மீனவர்களை சிறையில் அடைத்து தண்டித்து வருகிறது. இதை கண்டித்து மீனவர்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், கச்சத்தீவில் நடைபெறும் மாதா திருவிழாவில் கலந்துகொள்ள மாட்டோம் என அறிவித்து உள்ளனர்.  கச்சத்தீவு திருவிழாவுக்கு போகமாட்டோம் என மீனவர்கள் சங்கம் சார்பாக வேர்க்கோடு பங்குத்தந்தை அறிவித்துள்ளார்.

ராமேசுவரம் விசைப்படகு மீனவர்கள் 3 பேருக்கு இலங்கை ஊர்க்காவல் துறை நீதிமன்றம் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்து. இந்த தீர்ப்பை ரத்து செய்து,  மீனவர்கள் போராட்டத்தில் குதிதுள்ளனர். தமிழக மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி ராமேசுவரம் விசைப்படகு மீனவர்கள்  இன்று 6-வது நாளாக தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு மத்திய அரசை வலியுறுத்திவ ருகிறது.

இதற்கிடையில்,   கச்சத்தீவு அந்தோணியார் ஆலயத் திருவிழா வரும் 23, 24-ம் தேதிகளில் நடைபெற உள்ளது. இதில் இலங்கை, இந்திய பக்தர்கள் கலந்துகொள்வது வழக்கம். இதற்காக இலங்கை யாழ்ப்பாணம் மறை மாவட்ட ஆயர் ஜஸ்டின் ஞானப்பிரகாசம், இந்திய பக்தர்கள் கலந்து கொள்வதற்காக ராமேசுவரம் வேர்க்கோடு பங்குக்கு அழைப்பு விடுத்திருந்தார்.

இதை ஏற்று ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மூலம், ராமேசுவரம் வேர்க்கோடு பங்குத்தந்தை சந்தியாகு தலைமையில் கச்சத்தீவு திருவிழாவுக்கான பயண ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன. 75 விசைப்படகு, 28 நாட்டுப் படகுகளில் 3,455 பயணிகள் திருவிழாவில் பங்கேற்கப் பதிவு செய்திருந்தனர்.

இந்த நிலையில், தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளதை கண்டித்து மீனவர்கள் தொடர் போராட்டம் நடைபெற்று வருவதால், கச்சத்தீவு திருவிழாவைப் புறக்கணிப்பதாகவும், பயணத்துக்கான விசைப் படகுகளையும் வழங்க மாட்டோம் என்றும் மீனவர் சங்க பிரதிநிதிகள் அறிவித்து உள்ளனர்.

 இதுதொடர்பாக வேர்க்கோடு புனித ஜோசப் ஆலய பங்குத்தந்தை சந்தியாகு செய்தியாளர்களிடம் கூறும்போது,  ராமேசுவரம்மீனவர்களின் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தால் கச்சத்தீவு திருவிழாவுக்குப் பயணிகளை அழைத்துச் செல்ல முடியாது. எனவே, ராமேசுவரத்திலிருந்து செல்லவிருந்த திருப்பயணம் ரத்து செய்யப்படுகிறது. கச்சத்தீவு திருவிழாவில் பங்கேற்பதற்காக வெளி மாநிலம், வெளி மாவட்டங்களிலிருந்து பதிவு செய்திருந்த பயணிகள், ராமேசுவரம் வர வேண்டாம். பயணிகளிடம் வசூலிக்கப்பட்ட பயணத் தொகையை, வசூலித்தவர்கள் மூலமாகவே திருப்பிக் கொடுக்கநடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.