சென்னை: மழை பாதிப்பு காரணமாக, சென்னையின் 200 வார்டுகளில் சிறப்பு மருத்துவ முகாம் இன்று நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடு களை சென்னை மாநகராட்சி செய்துள்ளது. இந்த முகாமை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

வடகிழக்கு பருவமழை காரணமாக, தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக மழை கொட்டி வருகிறது. சென்னை உள்பட பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. சென்னையில் பெய்து வந்த கனமழை காரணமாக  சாலைகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கும் நிலையில், வாகன ஓட்டிகள் மிகவும் அவதிக்குள்ளாகியுள்ளனர். மேலும் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால், மக்களின் இயல்பு வாழ்க்கை பெரும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளது.

பல இடங்களில் தண்ணீர் வெளியேறாமல் துர்நாற்றம் வீசுகிறது. மழை நீர் தேங்கி இருப்பதால், சுகாதார சீர்கேடுகள் காரணமாக, தொற்றுநோய் பரவும் ஆபத்து இருப்பதால், அதனை தடுக்க தமிழக அரசு சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்களுக்கு நோய் பரவும் ஆபத்து ஏற்பட்டு உள்ளது.

இதையடுத்து, மழைநீரை வெளியேற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ள சென்னை மாநகராட்சி,   மழையால் பாதிக்கப்பட்ட பகுதியில் வாசிக்கும் மக்கள் மற்றம் வெள்ள நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று மருத்துவ முகாம் நடைபெறுகிறது.  அதன்படி, சென்னையில் உள்ள 200 வார்டுகளிலும் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறுகிறது.

 தனியார் மருத்துவமனைகளின் பங்களிப்போடு மாநகராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் 200 மருத்துவ முகாம்களை தேனாம்பேட்டை  ஆஸ்டின் நகரில்   தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மருத்துவ முகாமை தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில்  ஊரக தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் , மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி ஆர் பாலு, தமிழச்சி தங்கபாண்டியன் ,சட்டமன்ற உறுப்பினர் தா.வேலு,  மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.