காரைக்குடி

சபரிமலை பக்தர்களுக்காகக் காரைக்குடியில் இருந்து எர்ணாகுளத்துக்குச் சிறப்புக் கட்டண ரயில்கள் இயக்கப்பட உள்ளன.

தென்னக ரயில்வே சபரிமலை செல்லும் அய்யப்ப பக்தர்களின் கூட்ட நெரிசலைச் சமாளிக்கத் தென்னக ரயில்வே பல்வேறு பகுதிகளில் இருந்து சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. இந்நிலையில் சென்னையில் இருந்து தென்மாவட்டங்கள் வழியாகச் சபரிமலைக்குச் சிறப்பு ரயில்கள் இயக்க தென்மாவட்ட ரயில் பயணிகள் நலச்சங்கங்களின் தரப்பில் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டது.

எனவே முதன்முறையாக காரைக்குடியில் இருந்து விருதுநகர், ராஜபாளையம் வழியாக எர்ணாகுளத்துக்கு சிறப்புக்கட்டண சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.  இந்த ரயிலில் வழக்கமான கட்டணத்தை விட 1.3 மடங்கு கட்டணம் கூடுதலாக இருக்கும்.

இந்த சிறப்புக் கட்டண சிறப்பு ரயில் வருகிற 30 ஆம் தேதி, அடுத்த மாதம் 7, 14, 21, 28 ஆம் தேதி வியாழக்கிழமைகளில் இயக்கப்படுகிறது. எர்ணாகுளம்-காரைக்குடி சிறப்பு ரயில் (வ.எண்.06019) மேற்கண்ட நாட்களில் எர்ணாகுளத்தில் இருந்து அதிகாலை 4.45 மணிக்குப் புறப்பட்டு மதியம் 1.27 மணிக்குத் தென்காசிக்கும் மாலை 3.43 மணிக்கு விருதுநகர் ரயில் நிலையமும் வந்தடைகிறது. இரவு 7 மணிக்கு காரைக்குடி சென்றடைகிறது.

மறுமார்க்கத்தில் இந்த சிறப்பு ரயில் (வ.எண்.06020) காரைக்குடியில் இருந்து நள்ளிரவு 11.30 மணிக்குப் புறப்பட்டு நள்ளிரவு 1.58 மணிக்கு விருதுநகருக்கும், நள்ளிரவு 3.50 மணிக்குத் தென்காசிக்கும் செல்கிறது. மறுநாள் நண்பகல் 11.40 மணிக்கு எர்ணாகுளம் ரயில் நிலையம் சென்றடைகிறது.

இந்த ரயிலில் ஒரு 2-அடுக்கு குளிரூட்டப்பட்ட பெட்டி, 2 மூன்றடுக்கு குளிரூட்டப்பட்ட பெட்டி, 7 இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகள், 2 பொதுப்பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும்.

இந்த ரயில் இரு மார்க்கங்களிலும், திருப்புனித்துறை, வைக்கம் ரோடு, எட்டுமானூர், கோட்டயம், செங்கனச்சரேி, திருவல்லா, செங்கன்னூர், மாவேலிக்கரை, காயங்குளம், கொல்லம், குந்த்ரா, கொட்டாரக்கரை, அவனீசுவரம், புனலூர், தென்மலை, ஆரியங்காவு, செங்கோட்டை, தென்காசி, கடையநல்லூர், சங்கரன்கோவில், ராஜபாளையம், சிவகாசி, திருத்தங்கல், விருதுநகர், அருப்புக்கோட்டை, மானாமதுரை, சிவகங்கை ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.