சென்னை: சில தனியார் பள்ளிகளில் கோடை விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டு வரும் நிலையில், அவ்வாறு வகுப்புகள் நடத்துவது தெரிய வந்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

கடுமையான கோடை வெப்பம் நிலவும் நிலையில், சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது. மீறும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழ்நாட்டில் இந்த ஆண்டு கடுமையாக வெயில் வாட்டி வதைத்து வருகிறது. மேலும் வெப்ப அலையும் வீசிவருவதால், பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரவே அச்சம் அடைந்துள்ளனர். மேலும்,  தமிழ்நாட்டின் பல மாவட்டங்கள் மற்றும் வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில்,  தமிழ்நாட்டில் பள்ளி இறுதி தேர்வுகள் முடிவடைந்த கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில்,  சில தனியார் பள்ளிகள் அரசின் உத்தரவை மீறி பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தி வருகின்றன. இது தொடர்பான பள்ளி கல்வித்துறைக்கு புகார்கள் வந்துள்ளன.

இதையடுத்து, பள்ளிக்கல்வித் துறை இயக்குநர்  வெளியிட்டுள்ள அறிக்கையில்,  தமிழக அரசு கோடை விடுமுறை அனைத்துப் பள்ளிகளுக்கும் அறிவித்தப் பின்னரும் பல்வேறு பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்துவதாக தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருக்கின்றன.

கடுமையான வெப்பம் நிலவும் இக்காலத்தில் கட்டாயமாக சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது என்று தங்களது ஆளுகைக்குட்பட்ட பள்ளித் தலைமையாசிரியர்கள், ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

மீறி சிறப்பு வகுப்புகள் எடுக்கும் பள்ளிகளின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.இதில் அனைத்துக் கல்வி அலுவலர்களும் சிறப்புக் கவனம் செலுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்”  என எச்சரித்துள்ளார்.