சென்னை: தமிழ்நாட்டில் கொரோனா பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்த வாரம்தோறும்  வியாழக்கிழமைகளில் சிறப்பு முகாம்  நடத்தப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியம் தெரிவித்து உள்ளார்.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் தீவிரமடைந்துள்ளது. தமிழ்நாட்டிலும் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது.  நாடு முழுவதும் நேற்று (17ந்தேதி) மட்டும் புதிதாக மேலும் 2,58,089 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். தமிழ்நாட்டிலும் நேற்று புதிதாக மேலும், 23,443 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 29,63,366 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தலைநகர் சென்னையில் இதுவரை  6,52,395 பேர் கொரோனாவால்  பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழ்நாட்டில் தொற்று பரவலை தடுக்கும் வகையில் தடுப்பூசி போடும் பணியை தமிழ்நாடு அரசு தீவிரப்படுத்தி வருகிறது. இதற்காக சனிக்கிழமை தோறும், மாநிலம் முழுவதும் 50ஆயிரம் இடங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு லட்சக்கணக்கானோருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், முன்களப்பணியாளர்கள் மற்றும் மூத்த குடிமக்களுக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தும் வகையில், வாரந்தோறும் வியாழக்கிழமைகளில் சிறப்பு முகாம் நடத்தப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களுக்கு இனி வரும் வாரங்களில் வியாழக்கிழமைகளில் சிறப்பு முகாம் அமைத்து பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தப்படும் எனவும்,  அதேசமயம் வழக்கமாக நடக்கும் சனிக்கிழமை சிறப்பு முகாமும் நடைபெறும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியம் அவர்கள் தெரிவித்துள்ளார்.