சென்னை: சட்டப்பேரவையில் அதிமுக எம்எல்ஏக்கள் அமளியில் ஈடுபட்டதால், அவர்களை  வெளியேற்ற சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டார்.

பழனிசாமி தரப்பு எம்.எல்.ஏக்கள் சபாநாயகர் இருக்கை முன் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, சபாநாயகர் அப்பவு, சபையை நடத்தவிடாமல் கலகம் செய்ய வேண்டும் என்று நினைக்கிறீர்களா? என்று எடப்பாடி பழனிசாமி தரப்பினரிடம்  கேள்வி எழுப்பியுள்ளார். மக்கள் பிரச்சனைகளை பேசும் கேள்வி நேரத்திற்கு இடையூறு செய்யாதீர்கள் என்றும் சபாநாயகர் கூறினார்.

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்ட தொடரின் 2வது நாள்  தொடர் இன்று கேள்வி நேரத்துடன் தொடங்கியது. சபையில் எதிர்க்கட்சி தலைவர் துணைத்தலைவருக்கு அருகருகே இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டது குறித்து எடப்பாடி பழனிச்சாமி கேள்வி எழுப்ப முயன்றார். அதற்கு சபாநாயகர் அனுமதி மறுத்தார். இதையடுத்து எதிர்க்கட்சி துணை தலைவர் விவகாரத் தில் சபாநாயகர் ஒருதலைப்பட்சமாக நடந்துகொள்வதாக கூறி  இபிஎஸ் தரப்பினர் இருக்கையை விட்டு வெளியே வந்து அமளியில் ஈடுபட்டனர்.

தான் அளித்த கடிதங்கள் நிலை குறித்து எடப்பாடி பழனிசாமி தனது ஆதரவு எம்எல்ஏக்களுடன் சபாநாயகரிடம் கேள்வி எழுப்பி அமளிஅவையின் மாண்பை கெடுக்காதீர்கள் என்று எடப்பாடி பழனிசாமிக்கு சபாநாயகர் எச்சரிக்கை விடுத்தார். மேலுமி,   சட்டப்பேரவை விதிகளை மீற வேண்டாம் எனவும் சபாநாயகர் எச்சரித்துள்ளார்.

ஆனால் சபாநாயகர் எச்சரிக்கையை மீறி,  எதிர்க்கட்சி துணைத் தலைவர் தொடர்பாக பேச அனுமதிக்க வேண்டும் என்று கூறி முழக்கமிட்டனர். ஆனால் அதை ஏற்க மறுத்த சபாநாயகர் அப்பாவு,  இருக்கையை விட்டு வெளியே வந்ததற்கு கடுமையான நடவடிக்கை எடுப்பேன் என்றும் கண்டிப்புடன் கூறினார். எடப்பாடி பழனிசாமி தலைமையிலான எம்.எல்.ஏக்கள் கலகம் பண்ண வந்த மாதிரி தெரியுது. ஏதோ நோக்கத்தோட நீங்க வந்துருக்கீங்க. இத நான் அனுமதிக்க மாட்டேன் என்றார். 

ஆனால் அமளி தொடர்ந்ததால்,  சட்டப்பேரவையில் இருந்து எடப்பாடி பழனிசாமி தலைமையிலான எம்.எல்.ஏக்களை வெளியேற்ற அவைக் காவலர்களுக்கு சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டார்.

தமிழக சட்டப்பேரவையில் அதிமுகவுக்கு மட்டுமே 65 இடங்கள் உள்ளன. இதில் எடப்படி ஓபிஎஸ் என இரு பிரிவாக பிரிந்துள்ள நிலையில், எடப்பாடி பழனிச்சாமிக்கு 61 எம்எல்ஏக்கள் ஆதரவு உள்ளது. ஆனால், ஓபிஎஸ்-க்கு அவரையும் சேர்த்து 3 பேர் மட்டுமே உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.