மேட்ரிட்

கொரோனா பாதிப்பு காரணமாக ஸ்பெயின் அதிபர் ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்க மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா ஜி-20 அமைப்புக்கு இம்முறை தலைமை தாங்கி உள்ளது.  எனவே நாளையும், நாளை மறுநாளும் டில்லியில் உள்ள பிரகதி மைதானம் பாரத் மண்டபத்தில் ஜி-20 உச்சி மாநாடு நடைபெறுகிறது. இதில் பங்கேற்க பல்வேறு உலக நாடுகளின் தலைவர்கள் இந்தியாவிற்கு வருகை தர உள்ளனர்.

ஸ்பெயின் நாட்டின் அதிபர் பெட்ரோ சான்செஸ், இந்தியாவிற்கு வருகை தர இருந்தார். ஆனால் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது மருத்துவ பரிசோதனையில் கண்டறியப்பட்டுள்ளது. எனவே டில்லியில் நடைபெறும் ஜி-20 உச்சிமாநாட்டில் பெட்ரோ சான்செஸ் பங்கேற்க மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தனது டிவிட்டர் பக்கத்தில் பெட்ரோ சான்செஸ்,

“எனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே ஜி-20 உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக என்னால் டில்லிக்குச் செல்ல முடியாது.

அதே சமயம் முதல் துணை அதிபர் நடியா கேல்வினோ, பொருளாதார விவகாரங்கள் துறை அமைச்சர், வெளியுறவுத்துறை அமைச்சர் ஆகியோர் ஸ்பெயின் நாட்டின் பிரதிநிதிகளாக ஜி-20 உச்சி மாநாட்டில் பங்கேற்பார்கள்”

என்று தெரிவித்துள்ளார்.

ரஷ்ய அதிபர் புதின், சீன அதிபர் ஜின்பிங் ஆகியோர் ஜி-20 உச்சி மாநாட்டில் பங்கேற்க மாட்டார்கள் என ஏற்கனவே அறிவிப்பு வெளியான நிலையில், தற்போது ஸ்பெயின் அதிபர் பெட்ரோ சான்செஸ் கொரோனா தொற்று காரணமாக ஜி-20 உச்சி மாநாட்டில் பங்கேற்பதைத் தவிர்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.