டெல்லி: ஜி20 மாநாட்டில் இந்தியா வரும் அமெரிக்க அதிபர் பைடன் இன்று இரவு பிரதமர் மோடியுடன் இரவு விருந்தில் கலந்துகொள்கிறார். அப்போது, இரு தரப்புக்கும் இடையே முக்கிய பேச்சுவார்த்தை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஆண்டு ஜி20 மாநாட்டுக்கு இந்திய தலைமை ஏற்றுள்ளதால், ஜி20 மாநாடு இந்தியாவின் தலைநகர் டெல்லியில் பிரமாண்டமாக நடைபெறுகிறது. ஜி20 மாநாட்டில் பங்கேற்க இன்று, நாளை மற்றும் நாளை மறுநாள் என 3 நாட்கள் உலக தலைவர்கள் டெல்லி வருகை தருகின்றனர். இதையொட்டி பல அடுக்கு பாதுகாப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. பள்ளி கல்லூரிகள், மால்கள் மூடப்பட்டு உள்ளன.

இந்த மாநாட்டில் கலந்துகொள்ள ஜி20 குழுவில் அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், கொரிய குடியரசு, மெக்சிகோ, ரஷ்யா, சவுதி அரேபியா, தென்னாப்பிரிக்கா, துருக்கி, பிரிட்டன், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியன் ஆகிய நாடுகளின் தலைவர்கள் டெல்லி வருகை தருகின்றனர். ரஷிய அதிபர் மற்றும் சீன அதிபர் வராத நிலையில், அவர்களுக்கு பதிலாக அமைச்சர்கள் பங்கேற்க உள்ளனர்.

ஜி 20 மாநாட்டில் பங்கேற்பதற்காக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் விமானம் மூலம்  இன்று காலை டெல்லிக்கு புறப்பட்டார். பயணத்திற்கு முன்பு அதிபர் ஜோ பைடனுக்கு எடுத்த பரிசோதனையில் அவருக்கு கொரோனா இல்லை என்பது உறுதியான நிலையில் மாநாட்டில் பங்கேற்க இந்தியா கிளம்பினார். இந்தியா வரும் ஜோ பைடன், இன்று, நாளை மற்றும் நாளை மறுநாள் என 3 நாட்கள் இந்தியாவில் ஜோ பைடன் இருப்பார்.

இந்தியா வரும் அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று இரவு டெல்லியில் தனது இல்லத்தில் விருந்து அளித்து உபசரிக்கிறார். அதன்படி, இரு தலைவர்களும் இன்று (செப்டம்பர் 8) இரவு 7.30 மணிக்கு லோக் கல்யாண் மார்க்கில் அமைந்துள்ள பிரதமர் மோடியின் இல்லத்தில் சந்தித்துப் பேசுகின்றனர்.

அமெரிக்க அதிபராக பதவியேற்ற பிறகு ஜோ பைடனின் முதல் இந்தியா பயணம் இதுவாகும்.  மேலும், இன்றைய சந்திப்பு, ஜோ பைடன் மற்றும் பிரதமர் மோடியின் இரண்டாவது சிறப்பு விருந்து இதுவாகும். மூன்று மாதங்களுக்கு முன், பிரதமர் மோடியின் அரசுப் பயணத்தின்போது, ​​ஜோ பைடன், வெள்ளை மாளிகையில் அவருக்காக சிறப்பு விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தார். இரு தலைவர்களுக்கும் இடையிலான இருதரப்பு பேச்சுவார்த்தையின் போது, ​​இந்தியா-அமெரிக்கா இடையேயான விரிவான உலகளாவிய மற்றும் உத்தி கூட்டாண்மையை குறித்து பேசியதாக கூறப்படுகிறது.

மேலும் இன்று சந்திப்பின் போது இருதரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளனர். , எரிசக்தி, பாதுகாப்பு மற்றும் உயர் தொழில்நுட்பம், பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு முக்கிய துறைகளில் நடந்து வரும் இருதரப்பு ஒத்துழைப்பை மறுஆய்வு செய்வது குறித்து பிரதமர் மோடி மற்றும் அதிபர் பைடென் இடையேயான பேச்சுவார்த்தையில் கவனம் செலுத்தப்படும் என்று ஒரு வட்டாரம் தெரிவித்துள்ளது  அணுசக்தி, பாதுகாப்பு, விசா, தூதரகங்கள், ரஷ்யா-உக்ரைன் போர், ஜி20 உள்ளிட்ட இருதரப்பு பிரச்சினைகள் குறித்து இரு தலைவர்களும் விவாதிப்பார்கள் என்று அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் பிரதமர் நரேந்திர மோடி பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா மற்றும் மொரீஷியஸ் பிரதமர் பிரவிந்த் ஜக்நாத் ஆகியோருடன் இன்று வெள்ளிக்கிழமை தனித்தனியாக இருதரப்பு சந்திப்புகளை நடத்துவார் என்று கூறப்பட்டுள்ளது.

.அதிபர் ஜோ பைடன் இந்தியா கிளம்புவதற்கு முன்பாக வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் கரீன் ஜீன்-பியர் தெரிவித்ததாவது, “இந்த ஆண்டு ஜி-20 மாநாட்டிற்கு தலைமை தாங்கியதற்காக பிரதமர் நரேந்திர மோடியை நாங்கள் பாராட்டுகிறோம், மேலும் இந்த ஆண்டு இந்தியா வெற்றிகரமான மாநாட்டை நடத்துவதை உறுதி செய்ய நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். ஜூன் மாதம் பிரதமர் மோடியின் வருகையின் போது, அதிபர் பைடனும் பிரதமரும் உச்சிமாநாட்டில் பொதுவான முன்னுரிமைகளை நிறைவேற்றுவதற்கான உறுதிப்பாட்டை பகிர்ந்து கொண்டனர்” என்று தெரிவித்தார்.

முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் கடந்த 2020ம் ஆண்டு இந்தியா வந்திருந்தது குறிப்பிடத்தக்கது.